அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Showing posts with label விழிப்புணர்வு. Show all posts
Showing posts with label விழிப்புணர்வு. Show all posts

Saturday, February 18, 2012

குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் !


போலியோ சொட்டு மருந்து முகாம் 19-2-2012 மற்றும் 15-4-2012 அன்று நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 40,000-க்கும் மேற்பட்ட சொட்டு மருந்து மையங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்களில் பிரத்தியேகமாக நிறுவப்பட்டு 19-2-2012 அன்று சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.



பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் 903 நகரும் மையங்கள் நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 838 நடமாடும் குழுக்கள் மூலமாக தொலை தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.சொட்டு மருந்து வழங்கும் மையம் காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை செயல்படும்.அனைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் 19-2-2012 (ஞாயிற்றுக்கிழமை) ஒரு தவணையும் மீண்டும் (15-4-2012) ஞாயிற்றுக் கிழமை இரண்டாம் தவணையும் சொட்டு மருந்து கொடுக்கப்பட வேண்டும்.



தேசிய தடுப்பூசி அட்ட வணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாட்களில் மீண்டும் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் நாட்களில் சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும். சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு விரலில் மை வைக்கப்படுகிறது.இது விடுபடும் குழந்தைகளைக் கண்டறிய உதவுகிறது.



முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க தனியார் மருத்துவர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். இலங்கை வாழ் அகதிகள் மற்றும் இடம் பெயர்ந்து வாழ் குழந்தைகளுக்கும் முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 19-02-2012 போலியோ சொட்டு மருந்து முகாமில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு சாரா பணியாளர்கள், ரோட்டரி இண்டர்நேஷனல் மற்றும் அரிமா சங்கங்களை சார்ந்த பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபடுகிறார்கள்.



போலியோ சொட்டு மருந்து முகாம் சிறப்பாக நடைபெற்றதால் தமிழ்நாடு 8-வது வருடமாக போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது.இந்த நிலையை தக்க வைத்துக் கொள்ளவும், குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாததாகும். அனைத்து தாய்மார்களும் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Wednesday, February 15, 2012

குழந்தைகளே உஷார் !!! போலி மிட்டாய்கள் !


மதுரையில் வெளிநாட்டு கம்பெனிகளின் பெயரில், குழந்தைகள் நலத்திற்கு கேடான போலி மிட்டாய்கள் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மதுரை கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில், "கடைகளில் விற்கும் பாக்கெட் பொருட்களின் தரம் சந்தேகத்தை கிளப்புவதாக,' ஒருவர் மனு அளித்தார். "உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையினர் விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு,' கலெக்டர் சகாயம் உத்தரவிட்டார். துறையின் நியமன அலுவலர் டாக்டர் ஜெ.சுகுணா, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சரவணன், ராஜா, முரளி, மனோகரன், அம்ஜத் அலி தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

மதுரை லட்சுமிபுரம் "ஒரு குறிப்பிட்ட' கடையில் ஆய்வு செய்த போது, சில சாக்லெட் பொருட்கள் சந்தேகத்திற்குரியதாக இருந்தது. விசாரிக்கையில், தாய்லாந்து, இந்தோனேஷியா, சவுதி அரேபியா, பிலிப்பைன்ஸ் போன்ற நிறுவனங்களின் போலி முகவரியில், சாக்லெட், ஜெல்லி, கேண்டி மிட்டாய்கள் விற்றது தெரியவந்தது. சில பொருட்களில் தயாரிப்பு முகவரி இல்லை. அங்கிருந்த, ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள போலி வெளிநாட்டு மிட்டாய்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் சிலவற்றை, உணவு ஆய்வகத்திற்கு அனுப்பினர்.

கடைக்காரர் கொடுத்த தகவல் படி, மதுரை மாவட்டம் ஒத்தக்கடை, மேலூர், தெற்குத்தெருவில் போலி மிட்டாய்கள் தயாரிக்கப்படுவதும், மதுரை முழுவதும் விற்பனையில் இருப்பதும் தெரியவந்தது. குழந்தைகளுக்கு பொருட்கள் வாங்கும் போதும், கடைகளுக்கு குழந்தைகளை அனுப்பும் போதும், பெற்றோர் உஷாராக இருக்க வேண்டும். உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் டாக்டர் சுகுணா கூறியதாவது:மதுரையில் போலி மிட்டாய்கள் விற்பனைக்கு வந்துள்ளது குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். போலி மிட்டாய்களை கடைகளுக்கு சப்ளை செய்வோர், பில் தருவதில்லை. இதனால், அவர்களை ரகசியமாக நெருங்க வேண்டியுள்ளது. விரைவில் அவர்கள் பிடிபடுவர், என்றார்.

SOURCE : காலை நாளிதழ்
Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.