அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Showing posts with label பற்றாக்குறை. Show all posts
Showing posts with label பற்றாக்குறை. Show all posts

Friday, February 17, 2012

கூடங்குளத்தில் விஞ்ஞானிகள் சும்மா இருக்க அனுமதிக்க முடியாது

சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தங்கள் விஞ்ஞானிகள் காலவரையின்றி தொடர்ந்து சும்மாவே இருப்பதற்கு ரஷ்ய அரசு அனுமதிக்காது என்று அந்நாட்டின் சிறப்புத் தூதர் தெரிவித்தார்.

கூடங்குளம் போராட்டம் காரணமாக, அணுமின் நிலையப் பணிகள் தடைபட்டுள்ள சூழலில், ரஷிய கூட்டமைப்பின் இந்தியாவுக்கான சிறப்பு தூதர் அலெக்சாண்டர் எம்.கடகின் செவ்வாய்க்கிழமை சென்னையில் நிருபர்களிடம் கூறியது:

பொக்ரானில் இந்தியா அணுகுண்டு வெடித்து பெரிய அளவில் சோதனை செய்ததை பல உலக நாடுகள் எதிர்த்தன. ஆனால் ரஷியா தொடர்ந்து கூடங்குளம் அணுமின் நிலைய பணிகளை தொடர்ந்து மேற்கொண்டது.

ஜப்பானில் சுனாமியின்போது அணு உலை வெடித்து சேதம் அடைந்து 6 மாதம் கழித்து கூடங்குளம் அணு மின்நிலையத்துக்கு எதிர்ப்பு வந்தது ஏன்? ஜப்பானில் வெடித்த அணுஉலை பழமை வாய்ந்தது. பழைய தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டது.

கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணு உலை நவீன தொழில்நுட்பத்தில் உலகிலேயே பாதுகாப்பான அணுஉலையாக அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை இப்படி ஒரு அணு உலை இந்த அளவுக்கு பாதுகாப்பாக அமைக்கப்படவில்லை. காரணம் இப்போது அமைக்கப்பட்டுள்ளது புதிய நவீன தொழில்நுட்பத்தில் ஆகும்.

தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே நிறைய மின்சாரம் தேவைப்படுகிறது. தமிழ்நாட்டில் மின்சாரம் போதவில்லை என்று பிரமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதுகிறார். எனவே கூடங்குளம் அணு மின்நிலையம் வந்தால்தான் தமிழ்நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

கூடங்குளத்தில் உள்ள ரஷ்ய விஞ்ஞானிகள், கடந்த அக்டோபரில் இருந்தே சும்மா இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே கைதேர்ந்த விஞ்ஞானிகள். ரஷ்யா, ஸ்லோவாக்கியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு அவர்களது பணிகள் தேவைப்படுகின்றன.

கூடங்குளத்தில் அணு மின்நிலைய பணிகள் முடிந்தும் திறக்கமுடியாமல் உள்ளது. இது இந்தியாவின் பிரச்னை. இந்த பிரச்னையில் தலையிட ரஷியா விரும்பவில்லை.

அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவு எங்கிருந்து வருகிறது, எப்படி வருகிறது என்று உள்ளே போக நான் விரும்பவில்லை.

அணு உலை திறக்காமல் எங்கள் ரஷிய என்ஜினீயர்கள் எவ்வளவு நாட்கள்தான் வேலை இல்லாமல் சும்மா இருப்பார்கள். அவர்கள் தொடர்ந்து வேலை இல்லாமல் இருப்பதை அனுமதிக்க முடியாது. அதற்காக இவ்வளவு காலம்தான் அவர்கள் இங்கு இருப்பார்கள் என்று காலக்கெடு எதுவும் விதிக்க விரும்பவில்லை. இந்த பிரச்னையில் குறுகிய அளவில் அரசியல் நடைபெறுகிறது.

கூடங்குளம் அணுமின்நிலையம் திறக்கப்படவில்லை என்றால் இந்தியாவின் மின்சார தேவையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். ஆனால் இந்த பிரச்னை தீர்ந்து அணு உலை திறக்கப்படும் என்று நம்புகிறேன்," என்றார் ரஷிய சிறப்பு தூதர் அலெக்சாண்டர் கடகின்.

அப்போது, இந்தியா - ரஷியா தொழில் மற்றும் வர்த்தக அமைப்பின் நிறுவன தலைவர் வி.எம்.லட்சுமி நாராயணன், தலைவர் ஜெம் ஆர்.வீரமணி ஆகியோர் உடன் இருந்தனர்.
Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.