அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Tuesday, August 14, 2012

இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல்


மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. 

இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2011-ம் ஆண்டு 6.25 சதவீதம் பேருக்கு மட்டும்தான் மலேரியா பரவி இருந்தது. 

இதேபோல் 2009-ம் ஆண்டு டெங்கு காய்ச்சல் 37.19 சதவீதம் பேரை தாக்கியது. 2011-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 21.36 சதவீதமாக குறைந்தது. இந்த ஆய்வில் டெங்கு-மலேரியாவை பரப்பும் கொசுக்கள் 15 முதல் 30 வயதுக்குட்பட்டோரை மட்டுமே விரும்பி கடிப்பது தெரிய வந்துள்ளது. 

2011-ம் ஆண்டு மும்பையில் மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்களில் 42.84 சதவீதம் பேர் 15 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள். இதேபோல் டெங்கு காய்ச்சல் தாக்கியவர்களில் 64.40 சதவீதம் பேர் இளம் வயதினர்தான். 

இதுபற்றி ஆய்வு நடத்திய டாக்டர் ஜிதிந்தர் பாட்டியா கூறும்போது, மும்பை நகரில் கொசுக்கள் மூலம்தான் அதிக அளவில் நோய்கள் பரவுகின்றன. இதை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டன. இதன் காரணமாக 2009-ம் ஆண்டுக்கு பிறகு மலேரியா-டெங்கு காய்ச்சலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகின்றன. 

என்றாலும் மலேரியா- டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்கள் 15 முதல் 30 வயதுக்குட்பட்ட இளம் வயதினரைத்தான் விரும்பி கடிக்கின்றன. கடந்த 3 ஆண்டுகளாக நாங்கள் நடத்திய ஆய்வில் இது தெளிவாகத் தெரிகிறது என்றார்.
Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.