அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Friday, December 30, 2011

குர்ஆனுடன் முரண்படும் ஸஹீஹான (அறிவிப்பாளர் அடிப்படையில்) ஹதீஸ்களை பற்றிய அறிஞர்களின் கருத்து என்ன?


குர்ஆனுடன் முரண்படும் ஹதீஸ்களை மறுக்க வேண்டும் என்ற ஒரு புது விதியை பிஜே உருவாக்கிவிட்டார் என்று ஹதீஸ் கலை என்றால் என்ன என்பதை அறியாத சிலர் பிரச்சாரம் செய்கிறார்கள்.

குர்ஆனுடன் முரண்படும் ஹதீஸ்களை எவ்வாறு அணுகுவது என்பதை பிஜேவை விட தெளிவாக முன்னர் வாழ்ந்த அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். அந்த அறிஞர்களின் கூற்றுகள் கீழே தரப்பட்டுள்ளது.

பிஜே ஹதீஸ்களை மறுத்துவிட்டார் என்று விமர்சனம் செய்யும் யாரும் பிஜே மறுத்துள்ள ஹதீஸ்களை செயல்படுத்தவில்லை என்பது குறிப்பிடதக்கது (தேவைப்பட்டால் ஹதீஸ்களின் பட்டியல் வெளியிடப்படும்). ஹதீஸ்களின் பட்டியலை வெளியிட்டால் பிஜே ஹதீஸ்களை மறுக்கிறார் என்று விமர்சனம் செய்பவர்களின் உண்மை முகம் (ஹதீஸ்களை மறுக்கும் முகம்) தெரியவரும்.

இதற்கு விமர்சனம் செய்யும் சகோதரர்கள் பதில் தர கடமைப்பட்டுள்ளார்கள்.


மேலும் விபரங்களுக்கு கீழ்காணும் புத்தகங்களை படிக்கவும்:

ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டுமா?

ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா?

குறிப்பு:

இந்த புத்தகங்கள் வெளியிடப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இவற்றுக்கு பதில் தர விமர்சனம் செய்பவர்களுக்கு முடியவில்லை.


ஹதீஸ் கலையில் இவ்விதி உண்டா?

குர்ஆனைப் படிக்காத ஒருவர் குர்ஆனில் அல்ஹம்து சூரா இல்லை என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் அல்ஹம்து சூரா குர்ஆனில் உள்ளது என்று சொல்பவர்களைப் பார்த்து யாரும் சொல்லாத கருத்தை இவர்கள் கூறுகிறார்கள் என்று பேசினால் எவ்வளவு அறியாமையோ அது போல குர்ஆனிற்கு ஹதீஸ் முரண்பட்டால் ஹதீஸை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற கருத்து ஹதீஸ் கலையில் சொல்லப்படவில்லை என்று யார் கூறுகிறார்களோ அவர்களும் அறியாமையில் தான் இருக்கிறார்கள்.

இவர்கள் ஹதீஸ் கலையை முறையாகப் படிக்காததால் ஹதீஸ் கலையில் இல்லை என்று ஆகிவிடுமா? ஒன்று இரண்டு என்றில்லாமல் அதிகமான ஹதீஸ் கலை நூற்களில் இவ்விதி இடம் பெற்றிருக்கிறது. ஹதீஸ் கலைக்கு முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படும் நூற்களில் இவ்விதி இடம் பெற்றும் கூட இவர்கள் ஏன் இப்படி செத்துப் போன வாதங்களை வைக்கிறார்கள் என்று புரியவில்லை.

இமாம் ஷாஃபியின் கூற்று:

المسألة الخامسة خبر الواحد إذا تكاملت شروط صحته هل يجب عرضه على الكتاب قال الشافعي رضي الله عنه لا يجب لأنه لا تتكامل شروطه إلا وهو غير مخالف للكتاب

ஒரு ஹதீஸ் சரியாவதற்கான நிபந்தனைகள் முழுமையாகி விட்டால் அதை குர்ஆனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது கட்டாயமா? இது குறித்து இமாம் ஷாஃபி அவர்கள் கட்டாயமில்லை. ஏனென்றால் அந்த ஹதீஸ் குர்ஆனிற்கு முரண்படாமல் இருந்தால் தான் அதன் நிபந்தனைகள் முழுமையடையும் என்று கூறியுள்ளார்கள்.

நூல் : அல்மஹ்சூல் பாகம் : 4 பக்கம் : 438

இமாம் குர்துபீயின் கூற்று:

والخبر إذا كان مخالفا لكتاب الله تعالى لا يجوز العمل به.

ஹதீஸ் அல்லாஹ்வுடைய வேதத்திற்கு முரண்பட்டால் அதை செயல்படுத்தக் கூடாது.

நூல் : தஃப்சீருல் குர்துபீ பாகம் : 12 பக்கம் : 213

இமாம் ஜுர்ஜானியின் கூற்று:

الحديث الصحيح ما سلم لفظه من ركاكة ومعناه من مخالفة آية

ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எதுவென்றால் அதிலே மட்டரகமான வார்த்தைகள் இருக்காது. அதன் அர்த்தம் குர்ஆன் வசனத்திற்கு முரண்படாமல் இருக்கும்.

நூல் : அத்தஃரீஃபாத் பாகம் : 1 பக்கம் : 113

இமாம் சுயூத்தியின் கூற்று:

أن من جملة دلائل الوضع أن يكون مخالفا للعقل بحيث لا يقبل التأويل ويلتحق به ما يدفعه الحس والمشاهدة أو يكون منافيا لدلالة الكتاب القطعية

இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்து கொள்வதற்கான அடையாளங்களில் ஒன்று விளக்கம் கொடுக்க முடியாத வகையில் அறிவிற்கு அது மாற்றமாக இருப்பதாகும். அல்லது உறுதியான குர்ஆனுடைய கருத்திற்கு எதிராக அந்தச் செய்தி அமைந்திருக்கும். நடைமுறைக்கும் இயல்பான சூழ்நிலைக்கும் ஒத்து வராத செய்தியும் இந்த வகையில் அடங்கும்.

நூல் : தத்ரீபுர்ராவீ பாகம் : 1 பக்கம் : 276

இமாம் இப்னுல் கய்யுமின் கூற்று:

ومنها مخالفة الحديث صريح القرآن

இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்து கொள்வதற்கான அடையாளங்களில் ஒன்று ஹதீஸ் குர்ஆனுடைய தெளிவான கருத்திற்கு முரண்படுவதாகும்.

நூல் : அல்மனாருல் முனீஃப் பக்கம் : 80

فصل مخالفة الحديث الموضوع لصريح القرآن ومنها مخالفة الحديث لصريح القرآن

இட்டுக்கட்டப்பட்ட செய்தி குர்ஆனுடைய தெளிவான கருத்திற்கு முரண்படுவது பற்றிய பகுதி. ஹதீஸ் குர்ஆனுடைய தெளிவான கருத்திற்கு முரண்படுவது அது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பதற்கான அடையாளங்களில் ஒன்று.

நூல் : நக்துல் மன்கூல் பாகம் : 2 பக்கம் : 218

இமாம் அபூபக்கர் சர்ஹஸீயின் கூற்று:

فأما الوجه الاول وهو ما إذا كان الحديث مخالفا لكتاب الله تعالى فإنه لا يكون مقبولا ولا حجة للعمل به

ஹதீஸ் அல்லாஹ்வுடைய வேதத்திற்கு முரண்பட்டால் அது ஏற்றுக் கொள்ளப்படாது. செயல்படுத்துவதற்கு அது ஆதாரமாகவும் ஆகாது.

நூல் : உசூலுஸ் ஸர்ஹசீ பாகம் : 1 பக்கம் : 364

இந்த விதி பின்வரும் புத்தகங்களிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

وَذَلِكَ أَرْبَعَةُ أَوْجُهٍ أَيْضًا مَا خَالَفَ كِتَابَ اللَّهِ

இதை (நபி (ஸல்) அவர்களுக்கு சம்பந்தமில்லாத ஹதீஸ் என்பதை அறிவதற்கு) நான்கு முறைகள் இருக்கிறது. முதலாவது அல்லாஹ்வுடைய வேதத்திற்கு முரண்படும் செய்தியாகும்.

நூல் : கஷ்ஃபுல் அஸ்ரார் பாகம் : 4 பக்கம் : 492

وَالْأَوَّلُ عَلَى أَرْبَعَةِ أَوْجُهٍ : إمَّا أَنْ يَكُونَ مُعَارِضًا لِلْكِتَابِ

(செய்தியின் கருத்தை வைத்து நபி (ஸல்) அவர்களுக்குச் சம்பந்தமில்லாத செய்தி என்று முடிவு செய்யும்) முதல் வகையை நான்கு முறைகளில் (அறியலாம் அதில்). ஒன்று அந்த ஹதீஸ் குர்ஆனிற்கு முரண்பாடாக அமைவதாகும்.

நூல் : ஷரஹுத் தல்வீஹ் அலத் தவ்ளீஹ் பாகம் : 2 பக்கம் : 368

இமாம் இப்னு ஜவ்ஸியின் கூற்று:

وقال ابن الجوزي ما أحسن قول القائل إذا رأيت الحديث يباين المعقول أو يخالف المنقول أو يناقض الأصول فاعلم أنه موضوع

சிந்தனைக்கு மாற்றமாக அல்லது (ஆதாரப்பூர்வமாக) பதிவு செய்யப்பட்ட செய்திக்கு மாற்றமாக அல்லது அடிப்படைக்கே மாற்றமாக ஒரு ஹதீஸைக் கண்டால் அது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்று புரிந்து கொள் என்று சொன்னவர் எவ்வளவு அழகாகச் சொன்னார் என்று இப்னுல் ஜவ்ஸீ கூறினார்கள்.!

நூல் : தத்ரீபுர்ராவீ பாகம் : 1 பக்கம் : 277

وقال ابن الجوزي الحديث المنكر يقشعر له جلد الطالب للعلم وينفر منه قلبه في الغالب

எதைக் கண்டால் கற்கும் மாணவனின் தோல் சிலிர்த்து அவரது உள்ளம் பெரும்பாலும் அதை (ஏற்றுக்கொள்வதை) விட்டும் விரண்டோடுமோ அதுவே மறுக்கப்பட வேண்டிய செய்தி என்று இப்னுல் ஜவ்ஸீ கூறினார்கள்.!.

நூல் : தத்ரீபுர்ராவீ பாகம் : 1 பக்கம் : 275

அர்ரபீஉ பின் ஹய்ஸமின் கூற்று:

عن الربيع بن خثيم قال إن من الحديث حديثا له ضوء كضوء النهار نعرفه به وأن من الحديث حديثا له ظلمة كظلمة الليل نعرفه بها

சில ஹதீஸ்கள் இருக்கின்றன. பகலின் ஒளியைப் போல் அதற்கும் ஒளி உண்டு. அதன் மூலமே (அது சரியானது என்பதை) அறிந்து கொள்ளலாம். இன்னும் சில ஹதீஸ்கள் இருக்கின்றன. இரவின் இருளைப் போல் அதற்கும் இருள் உண்டு. அதன் மூலமே (அது தவறானது என்பதை) அறிந்து கொள்ளலாம்.

நூல் : மஃரிஃபத்து உலூமில் ஹதீஸ் பாகம் : 1 பக்கம் : 62

முஹம்மது பின் அப்தில்லாஹ்வின் கூற்று:

இந்த அறிஞரின் கூற்றை இமாம் இப்னு ஹஸ்ம் அவர்கள் அல்இஹ்காம் என்ற தன்னுடைய நூலில் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்கள்.

الإحكام لابن حزم ள جزء 2 - صفحة 209 ன

 وقال محمد بن عبد الله بن مسرة الحديث ثلاثة أقسام فحديث موافق لما في القرآن فالأخذ به فرض وحديث زائد على ما في القرآن فهو مضاف إلى ما في القرآن والأخذ به فرض وحديث مخالف لما في القرآن فهو مطرح

முஹம்மது பின் அப்தில்லாஹ் என்பார் கூறுகிறார் : ஹதீஸ் மூன்று வகையாகும்.

1. குர்ஆனிற்கு ஒத்து அமைகின்ற ஹதீஸ் (முதலாவது வகையாகும்). இதை ஏற்றுக் கொள்வது கட்டாயம்.

2. குர்ஆனில் இருப்பதை விட கூடுதலான தகவலைத் தருகின்ற ஹதீஸ் (இரண்டாவது வகையாகும்). இதையும் குர்ஆனுடன் இணைத்து ஏற்றுக் கொள்வது கட்டாயம்.

3. குர்ஆனுடைய கருத்திற்கு முரணாக வரும் ஹதீஸ் (மூன்றாவது வகையாகும்). இது ஒதுக்கப்பட வேண்டியது.

நூல் : அல்இஹ்காம் பாகம் : 2 பக்கம் : 209

விதியை செயல்படுத்திய மேதைகள்:

குர்ஆனிற்கு ஹதீஸ் முரண்பட்டால் அந்த ஹதீஸை ஏற்கலாகாது என்ற இந்த விதி அறிஞர்களின் ஏடுகளில் எழுத்தளவில் மட்டும் உள்ளதல்ல. அறிவிப்பாளர் தொடரை அலசிப் பார்த்து ஹதீஸின் தரத்தை முடிவு செய்யும் இந்த அறிவு ஜீவிகள் சரியான அறிவிப்பாளர் தொடரில் குர்ஆனிற்கு மாற்றமான கருத்துக்களைத் தருகின்ற ஹதீஸ்களை ஏற்க மறுத்துள்ளார்கள்.

புகாரி முஸ்லிம் போன்ற சிறந்த நூற்களில் ஹதீஸ் இடம் பெற்றிருந்தாலும் செய்தியில் குர்ஆனிற்கு மாற்றமான கருத்து வருகின்ற போது அறிவிப்பாளர் தொடரை இந்த நியாயவான்கள் பொருட்படுத்தவில்லை. இதற்காக நம்மை விமர்சிப்பவர்கள் இவர்களை வழிகேடர்கள் என்று கூற மாட்டார்கள். இந்த அறிஞர் கடைபிடித்த விதியை நாம் கடைப்பிடித்தால் நம்மை வழிகேடர்கள் என்று கூறுகிறார்கள். பின்வரும் செய்திகளைப் படிப்பவர்கள் யார் வழிகேடர்கள் என்பதைத் தெளிவாக உணர்ந்து கொள்வார்கள்.

இமாம் இஸ்மாயீலீ அணுகிய முறை:

சஹீஹுல் புகாரிக்கு முஸ்தக்ரஜ் என்று சொல்லப்படும் ஹதீஸ் தொகுப்பு நூலைத் தொகுத்தவர் இஸ்மாயீலீ என்ற அறிஞர் ஆவார். கல்வி மேதை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் புகாரிக்கு விரிவுரை தரும் போது இந்த அறிஞரின் கூற்றைப் பல இடங்களில் பதிவு செய்கிறார்.

புகாரியில் விமர்சிக்கப்பட்ட ஹதீஸ்களுக்கு பதில் தரும் போது இந்த அறிஞரின் கூற்றை இப்னு ஹஜர் எடுத்துக் காட்டாமல் இருந்ததில்லை. இப்படிப்பட்ட அறிஞர் நாமெல்லாம் அறிந்து வைத்திருக்கும் அறிவிப்பாளர் தொடரில் குறையில்லாத புகாரியில் இடம்பெற்ற ஒரு ஹதீஸை எப்படி குறை காணுகிறார் என்று பாருங்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் (தம் தந்தை) ஆஸர் அவர்களை மறுமை நாளில் சந்திப்பார்கள். ஆஸருடைய முகத்தில் (புகையின்) கருமையும், புழுதியும் படிந்திருக்கும். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள் எனக்கு மாறு செய்ய வேண்டாம் என்று நான் உங்களிடம் கூறவில்லையா? என்று அவர்களிடம் கேட்பார்கள். அதற்கு அவர்களின் தந்தை இன்று உனக்கு நான் மாறு செய்ய மாட்டேன் என்று கூறுவார். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவா மக்களுக்கு உயிர் கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளில் என்னை இழிவுபடுத்த மாட்டாய் என்று எனக்கு நீ வாக்களித்திருந்தாய். (உன் கருணையிலிருந்து) வெகு தொலைவில் இருக்கும் என் தந்தையை விட வேறெந்த இழிவு (எனக்கு) அதிகம் இழிவு தரக்கூடியது? என்று கேட்பார்கள்.

அப்போது உயர்வான அல்லாஹ் இப்ராஹீம் அவர்களிடம் நான் சொர்க்கத்தை இறை மறுப்பாளர்களுக்குத் தடை செய்து விட்டேன் என்று பதிலளிப்பான். பிறகு இப்ராஹீமே உங்கள் கால்களுக்குக் கீழே என்ன இருக்கிறது என்று பாருங்கள் என்று கூறப்படும். அவர்கள் கீழே பார்ப்பார்கள். அப்போது அங்கே இரத்தத்தில் தோய்ந்த முடிகள் நிறைந்த கழுதைப்புலி ஒன்று கிடக்கும். பின்னர் அதன் கால்களைப் பிடித்துத் தூக்கப்பட்டு நரகத்தில் அது போடப்படும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி (3350)

இப்னு ஹஜர் அவர்கள் இந்த ஹதீஸிற்கு விளக்கம் கொடுக்கையில் பின்வருமாறு இஸ்மாயீலீ அவர்களின் கூற்றைப் பதிவு செய்கிறார்.

. وَقَدْ اِسْتَشْكَلَ الْإِسْمَاعِيلِيّ هَذَا الْحَدِيث مِنْ أَصْله وَطَعَنَ فِي صِحَّته فَقَالَ بَعْدَ أَنْ أَخْرَجَهُ : هَذَا خَبَر فِي صِحَّته نَظَر مِنْ جِهَة أَنَّ إِبْرَاهِيم عَلِمَ أَنَّ اللَّه لَا يُخْلِف الْمِيعَاد ; فَكَيْف يَجْعَل مَا صَارَ لِأَبِيهِ خِزْيًا مَعَ عِلْمه بِذَلِكَ ؟ وَقَالَ غَيْره : هَذَا الْحَدِيث مُخَالِف لِظَاهِرِ قَوْله تَعَالَى : ( وَمَا كَانَ اِسْتِغْفَار إِبْرَاهِيم لِأَبِيهِ إِلَّا عَنْ مَوْعِدَة وَعَدَهَا إِيَّاهُ , فَلَمَّا تَبَيَّنَ لَهُ أَنَّهُ عَدُوّ لِلَّهِ تَبَرَّأَ مِنْهُ ) اِنْتَهَى

இஸ்மாயீலீ அவர்கள் இந்த ஹதீஸின் கருத்தில் சிக்கல் இருப்பதாகக் கருதி இதனுடைய நம்பகத் தன்மையில் குறை கூறியுள்ளார். அவர் இந்த ஹதீஸைப் பதிவு செய்துவிட்டு (பின்வருமாறு) கூறுகிறார். அல்லாஹ் வாக்கு மீறமாட்டான் என்று இப்ராஹீம் (அலை) அவர்கள் திட்டமாக அறிந்திருந்தார்கள். இதை அவர்கள் விளங்கியிருக்கும் போது தனது தந்தைக்கு ஏற்பட்டதைத் தனக்கு ஏற்பட்ட இழிவாக அவர்கள் எப்படிக் கருதியிருப்பார்கள்? என்று இஸ்மாயீலீ கூறியுள்ளார். இப்ராஹீம் தம் தந்தைக்காக பாவமன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே. அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர். சகிப்புத் தன்மை உள்ளவர் என்ற இந்த இறைவனுடைய வெளிப்படையான கூற்றிற்கு இந்த ஹதீஸ் முரண்படுகிறது என்று இஸ்மாயீலீ அல்லாமல் மற்றவர்கள் விமர்சித்துள்ளார்கள்.

நூல் : ஃபத்ஹுல்பாரீ பாகம் : 8 பக்கம் : 500

மேற்கண்ட ஹதீஸை அறிஞர்கள் விமர்சிக்கும் போது அதன் அறிவிப்பாளர் தொடரைப் பற்றி அவர்கள் பேச்சையே எடுக்கவில்லை. மாறாக அல்லாஹ் வாக்கு மீறுவான் என்று இப்ராஹீம் நபி எண்ணுவது இறைத் தூதரின் தன்மைக்கு மாற்றமானது என்பதனால் இது ஆட்சேபனைக்குரியது என்கின்றனர்.

மேலும் தனது தந்தை அல்லாஹ்வின் எதிரி என்று தெளிவானவுடன் இப்ராஹீம் தன் தந்தையிடமிருந்து விலகிக் கொண்டார் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. ஆனால் இந்த ஹதீஸ் அவர்கள் விலகவில்லை. மறுமையிலும் தன் தந்தைக்காக வாதாடுவார்கள் என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது.

எனவே இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று நாம் கூறுகின்ற அடிப்படையில் நின்று இந்த அறிஞர்கள் முடிவு செய்துள்ளார்கள். சொல்லுகின்ற கருத்து நியாயமானதா என்று சிந்திக்காமல் எந்த இமாமாவது நீங்கள் கூறுவதைப் போன்று கூறியுள்ளாரா? என்று குருட்டுத்தனமாகக் கேட்பவர்கள் இந்த அறிஞர்களின் கூற்றுக்களை உற்று நோக்க வேண்டும்.

இமாம் மாலிக் மற்றும் குர்துபீயின் வழிமுறை:

கஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த ஒரு பெண்மனி நபி (ஸல்) அவர்களிடம் கடைசி ஹஜ்ஜின் போது வந்து அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ்வுடைய ஹஜ் என்னும் கடமை என் தந்தைக்கு விதியாகி விட்டது. அவர் முதிர்ந்த வயதுடையவராகவும் வாகனத்தில் அமர முடியாதவராகவும் இருக்கிறார். நான் அவர் சார்பாக ஹஜ் செய்தால் அது நிறைவேறுமா? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ஆம் என்றார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி (1854)

இந்த ஹதீஸை இமாம் மாலிக் அவர்கள் நிராகரித்ததை குர்துபீ அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள்.

وقال القرطبي رأى مالك أن ظاهر حديث الخثعمية مخالف لظاهر القرآن فرجح ظاهر القرآن ولا شك في ترجيحه من جهة تواتره

குர்துபீ கூறுகிறார் : கஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த பெண்மணி அறிவிக்கும் ஹதீஸ் குர்ஆனுடைய வெளிப்படையான கருத்திற்கு முரண்படுகிறது என்று மாலிக் அவர்கள் கருதுகிறார். ஆகையால் அவர் குர்ஆனுடைய வெளிப்படையான கருத்திற்கே முன்னுரிமை கொடுத்துள்ளார். குர்ஆனுக்குள்ள அங்கீகாரத்தைக் கவனித்தால் குர்ஆனிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

நூல் : பத்ஹுல்பாரீ பாகம் : 4 பக்கம் : 70

ஹஜ் செய்வதற்குச் சக்தி பெற்றவர்களுக்குத் தான் ஹஜ் கடமை என்று திருக்குர்ஆன் கூறுகிறது. ஆனால் இந்த ஹதீஸில் வாகனத்தில் கூட உட்கார இயலாத வயதான தன் தந்தைக்கு ஹஜ் கடமையானதாக சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பெண்மணி கூறியுள்ளார். இதனால் இமாம் மாலிக் அவர்கள் இந்த ஹதீஸைப் பின்தள்ளிவிட்டு குர்ஆனுக்கு முன்னுரிமை தந்துள்ளார்கள்.

அப்படி முன்னுரிமை வழங்குவது முழுக்க முழுக்கச் சரிதான் என்று இமாம் குர்துபீ அவர்கள் ஒப்புதல் தருகிறார்கள். இந்த ஹதீஸில் உள்ள அறிவிப்பாளர்களில் ஒருவரின் மீது கூட குறை கூற முடியாது. அனைவரும் சிலாகித்துச் சொல்லப்பட்டவர்கள். இப்படிப்பட்டவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸை குர்ஆனிற்கு முரண்படுகிறது என்று கூறிப் பின்தள்ளுவதால் ஹதீஸின் மீது இந்த அறிஞர்களுக்கு அக்கரை இல்லை என்று பொருளா?

இமாம் இப்னு தய்மியாவின் வழிமுறை:

இப்னு தய்மியா அவர்கள் அனைவராலும் போற்றப்படும் மிகச் சிறந்த அறிஞர். இந்த அறிஞர் குர்ஆனிற்கு முரண்பட்டால் ஹதீஸை ஏற்கக் கூடாது என்ற அடிப்படையில் நின்று நம்மையெல்லாம் மிஞ்சுகின்ற வகையில் ஹதீஸ்களை விமர்சனம் செய்துள்ளார்.

1. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கையைப் பிடித்துக் கூறினார்கள்: கண்ணியமும், மகத்துவமும் மிக்க அல்லாஹ் சனிக்கிழமை பூமியைப் படைத்தான். பூமியிலே ஞாயிற்றுக்கிழமை மலையைப் படைத்தான். திங்கட்கிழமை மரங்களைப் படைத்தான். செவ்வாய்க்கிழமை உலோகங்களைப் படைத்தான். புதன்கிழமை ஒளியைப் படைத்தான். வியாழக்கிழமை பூமியிலே உயிரினங்களைப் பரவச் செய்தான். வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் வெள்ளிக்கிழமையின் கடைசி நேரமான அஸர் மற்றும் இரவுக்கு மத்தியில் கடைசிப் படைப்பாக ஆதமைப் படைத்தான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் (4997)

وَلَوْ كَانَ أَوَّلُ الْخَلْقِ يَوْمَ السَّبْتِ وَآخِرُهُ يَوْمَ الْجُمُعَةِ لَكَانَ قَدْ خُلِقَ فِي الْأَيَّامِ السَّبْعَةِ وَهُوَ خِلَافُ مَا أَخْبَرَ بِهِ الْقُرْآنُ مَعَ أَنَّ حُذَّاقَ أَهْلِ الْحَدِيثِ يُثْبِتُونَ عِلَّةَ هَذَا الْحَدِيثِ مِنْ غَيْرِ هَذِهِ الْجِهَة

சனிக்கிழமை படைப்பதைத் துவங்கி வெள்ளிக்கிழமை முடித்திருந்தால் திட்டமாக இவ்வுலகம் ஏழுநாட்களில் படைக்கப்பட்டதாகி விடும். இக்கருத்து குர்ஆன் அறிவிக்கும் செய்திக்கு மாற்றமானதாகும். ஹதீஸ் கலையில் நுன்னறிவுள்ளவர்கள் இது அல்லாமல் வேறு கோணங்களிலும் இந்த ஹதீஸில் குறை உள்ளதென நிரூபித்துள்ளார்கள்.

நூல் : மஜ்மூஉ ஃபதாவா இப்னி தய்மியா பாகம் : 4 பக்கம் : 34

வானம் மற்றும் பூமி ஆறு நாட்களில் படைக்கப்பட்டதாக திருக்குர்ஆன் சொல்லும் போது ஏழு நாட்களில் படைக்கப்பட்டதாக இந்த ஹதீஸ் கூறுகிறது. எனவே இது ஒரு குறை. இது அல்லாமல் அறிவிப்பாளர் தொடரிலும் குறை உள்ளது என்பதே இப்னு தய்மியா அவர்களுடைய கூற்றின் சாராம்சம்.

இது அல்லாமல் வேறு கோணங்களிலும் இந்த ஹதீஸ் குறை காணப்பட்டுள்ளது என்று இப்னு தைமியா கூறியிருப்பது இதுவும் குறை கூறுவதற்குரிய ஒரு வழி முறை தான் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

2. நபித்தோழர்களைத் திட்டுகின்ற ராஃபிளா கூட்டத்தைச் சார்ந்தவர்கள் பாவமன்னிப்புக் கோரினால் அல்லாஹ் அவர்களுடைய பாவமன்னிப்பை ஏற்க மாட்டான் என்பதற்கு பின்வரும் ஹதீஸை ஒரு கூட்டம் சான்றாகக் காட்டுகிறது.

எனது தோழர்களைத் திட்டுவது மன்னிக்கப்படாத பாவம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்பதே அந்த ஹதீஸ். இந்த ஹதீஸை இப்னு தய்மியா அவர்கள் இரு கோணங்களில் விமர்சனம் செய்கிறார். அதில் ஒன்று இது குர்ஆனிற்கு முரண்படுகிறது என்ற விதியின் அடிப்படையில் உள்ளது.

وَهَذَا بَاطِلٌ لِوَجْهَيْنِ : ( أَحَدُهُمَا أَنَّ الْحَدِيثَ كَذِبٌ بِاتِّفَاقِ أَهْلِ الْعِلْمِ بِالْحَدِيثِ وَهُوَ مُخَالِفٌ لِلْقُرْآنِ وَالسُّنَّةِ وَالْإِجْمَاعِ ؛ فَإِنَّ اللَّهَ يَقُولُ فِي آيَتَيْنِ مِنْ كِتَابِهِ : { إنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ } …وَذَلِكَ أَنَّ اللَّهَ قَالَ : { قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا }

இந்த ஹதீஸ் இரு விதங்களில் பொய்யானதாகும். ஒன்று ஹதீஸ் கலை அறிஞர்களின் ஏகோபித்த கருத்துப்படி இது பொய்யான செய்தியாகும். இது குர்ஆனிற்கும் சுன்னாவிற்கும் ஏகோபித்த கருத்திற்கும் முரண்படுகிறது. ஏனென்றால் அல்லாஹ் தன்னுடைய வேதத்தில் இரு வசனங்களில் இவ்வாறு கூறுகிறான். தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். (4 : 48) (4 : 116) . . .

மேலும் தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக! (39 :53) என்றும் கூறுகிறான்.

நூல் : மஜ்மூஉ ஃபதாவா இப்னிதய்மியா பாகம் : 2 பக்கம் : 185

இப்னுதய்மியா அவர்கள் அறிவிப்பாளர் தொடரில் குறையுள்ள செய்தியைத் தான் இவ்வாறு அனுகியுள்ளார் என்று கூறி இவ்விதியைப் புறக்கணிக்கக் கூடாது. அறிவிப்பாளர் தொடரில் குறையில்லாத செய்திகளுக்கும் இவ்விதியை இமாம்கள் பொறுத்தியுள்ளார்கள் என்பதை முன்பே பார்த்தோம்.

உதாரணத்திற்காக இரண்டை மட்டும் கூறியுள்ளோம். இது போன்று ஹதீஸின் கருத்தை வைத்து பல செய்திகளை இப்னு தய்மியா அவர்கள் விமர்சனம் செய்துள்ளார்கள்.

இமாம் இப்னுல் கய்யுமின் வழிமுறை:

சஹீஹ் முஸ்லிமில் இடம் பெற்றுள்ள உலகம் படைக்கப்பட்டதைக் கூறும் ஹதீஸை இப்னு தய்மியா அவர்கள் குர்ஆனிற்கு முரண்படுகிறது என்று கூறியதைப் போல இப்னுல் கய்யும் அவர்களும் கூறியுள்ளார்கள். இப்னு தய்மியாவை விட ஒரு படி மேலே சென்று இட்டுக் கட்டப்பட்ட செய்திக்கு ஒப்பு என்று இப்னுல் கய்யும் கூறியுள்ளார்.

فصل ويشبه هذا ما وقع فيه الغلط من حديث أبي هريرة خلق الله التربة يوم السبت الحديث وهو في صحيح مسلم . . . لأن الله أخبر أنه خلق السماوات والأرض وما بينهما في ستة أيام وهذا الحديث يقتضي أن مدة التخليق سبعة أيام والله تعالى أعلم

அல்லாஹ் பூமியை சனிக்கிழமை படைத்தான் என்று அபூஹுரைரா அவர்கள் அறிவிக்கும் தவறு நிகழ்ந்துவிட்ட செய்தி இதைப் (இட்டுக்கட்டப்பட்ட செய்தியைப்) போன்றதாகும். இது சஹீஹு முஸ்லிமில் இடம்பெற்றுள்ளது. ஏனென்றால் வானம் பூமி அவ்விரண்டிற்கு மத்தியில் உள்ளவற்றை ஆறு நாட்களில் படைத்ததாக அல்லாஹ் கூறுகிறான். மொத்தம் ஏழு நாட்களில் இவை படைக்கப்பட்டதாக இந்த ஹதீஸ் கூறுகிறது.

இமாம் அல்பானியின் போங்கு :

1. இறைவா உன்னிடத்தில் முஹம்மதிற்குரிய அந்தஸ்தின் பொருட்டால் நான் உன்னிடத்தில் பாவமன்னிப்புக் கேட்கிறேன் என்று ஆதம் (அலை) அவர்கள் கூறியதால் தான் அல்லாஹ் அவர்களை மன்னித்தான் என்று ஒரு ஹதீஸ் கூறுகிறது. இந்தச் செய்தி குர்ஆனிற்கு முரண்படுகிறது என்று கூறி இமாம் அல்பானீ அவர்கள் விமர்சிக்கிறார்கள்.

التوسل ள جزء 1 - صفحة 114 ன

مخالفة هذا الحديث للقرآن : ومما يؤيد ما ذهب إليه العلماء من وضع هذا الحديث وبطلانه أنه يخالف القرآن الكريم في موضعين منه . . . وثبت مخالفة الحديث للقرآن فكان باطلا

இந்த ஹதீஸ் குர்ஆனிற்கு முரண்படுகிறது. இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது பொய்யானது என்று அறிஞர்கள் முடிவு செய்ததற்குக் காரணம் இந்த ஹதீஸ் இரண்டு இடங்களில் சங்கை மிக்க குர்ஆனுடன் முரண்படுகிறது. . . இந்த ஹதீஸ் குர்ஆனிற்கு முரண்படுவது நிரூபணமாகி விட்டதால் இந்த ஹதீஸ் தவறாகி விட்டது.

நூல் : அத்தவஸ்ஸுல் பாகம் : 1 பக்கம் : 114

"எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோராவோம்'' என்று அவ்விருவரும் கூறினர்.

அல்குர்ஆன் (7 : 23)

மேற்கண்ட வசனம் கூறும் வார்த்தையை ஆதம் ஹவ்வா ஆகிய இருவரும் கூறியதாகக் குர்ஆன் கூறுகிறது. ஆனால் இதற்கு மாற்றமாக வேறொரு வார்த்தையைக் கூறியதாக இந்த ஹதீஸ் கூறுகிறது. எனவே இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று அல்பானீ வாதிடுகிறார்.

2. உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் பஞ்சம் ஏற்படுகிறது. அப்போது ஒருவர் நபி (ஸல்) அவர்களின் கப்ருக்கு அருகில் வந்து அல்லாஹ்வின் தூதரே உங்களது சமுதாயத்திற்காக மழை வேண்டுங்கள். ஏனென்றால் அவர்கள் (பஞ்சத்தால்) அழிந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறியதாக முஸன்னஃப் இப்னு அபீ ஷைபாவில் ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.

மழை வேண்டுமானால் அதற்காகத் தொழுகை நடத்த வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த சரியான வழிமுறைக்கும் உங்கள் இறைவனிடத்தில் பாவமன்னிப்புக் கேளுங்கள். அவன் உங்களுக்கு மழையைத் தருவான் என்ற குôஆன் வசனத்திற்கும் இந்தச் சம்பவம் முரண்படுகிறது.

மழை வேண்டுமானால் நபியவர்களிடத்தில் சென்று கேட்கும் படி குர்ஆன் கற்றுத் தரவில்லை. மாறாக அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்புக் கேட்கும் படி சொல்கிறது. எனவே இந்தச் செய்தி குர்ஆனிற்கு முரண்படுவதால் இதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று அல்பானீ வாதிடுகிறார்.

التوسل ள جزء 1 - صفحة 121 ன

الثاني : أنها مخالفة لما ثبت في الشرع من استحباب إقامة صلاة الاستسقاء لاستنزال الغيث من السماء كما ورد ذلك في أحاديث كثيرة وأخذ به جماهير الأئمة بل هي مخالفة لما أفادته الآية من الدعاء والاستغفار وهي قوله تعالى في سورة نوح : { فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا . . . }

மழை பெய்ய வேண்டுமென நாடினால் மழைத் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்ற கருத்து பல ஹதீஸ்களில் வந்துள்ளது. இதையே அதிகமான இமாம்கள் கடைப்பிடித்துள்ளார்கள். மார்க்கத்தில் நிரூபணமான இந்த விஷயத்திற்கு இந்தச் சம்பவம் முரண்படுகிறது. அது மட்டுமல்லாமல் (மழை வேண்டுமென்றால்) பாவமன்னிப்புக் கோர வேண்டும்; துவா செய்ய வேண்டும் என்று குர்ஆன் வசனம் கூறும் கருத்திற்கு முரண்பாடாகவும் இச்சம்பவம் உள்ளது.

உங்கள் இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்! அவன் மன்னிப்பவனாக இருக்கிறான்''. உங்களுக்கு அவன் தொடர்ந்து மழையை அனுப்புவான். (71 : 10) என்பதே அந்த வசனம்.

நூல் : அத்தவஸ்ஸுல் பாகம் : 1 பக்கம் : 121

இமாம் புல்கீனீயின் வழிமுறை:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : சொர்க்கம் இருக்கிறதே (அதில் தகுதியானோர் நுழைவார்கள்). அல்லாஹ் தன் படைப்புகளில் யாருக்கும் அநீதி இழைப்பதில்லை. அவன் தான் நாடியவர்களை நரகத்திற்காகப் படைப்பான். அவர்கள் நரகத்தில் போடப்படும் போது இன்னும் இருக்கிறதா? என்று மும்முறை கேட்கும். இறுதியில் இறைவன் அதில் தனது பாதத்தை வைக்க அது நிரம்பி விடும். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும். போதும் போதும் போதும் என்று அது கூறும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி (7449)

இந்த ஹதீஸில் உள்ள அறிவிப்பாளர் அனைவரும் பலரால் புகழ்ந்து சொல்லப்பட்டவர்கள். மறுமை நாளில் சிலரைப் படைத்து அவர்களை நரகத்திற்குள் அல்லாஹ் கொண்டு செல்வான் என்ற கருத்தை இந்த ஹதீஸிலிருந்து சிலர் விளங்குகிறார்கள்.

குற்றம் புரியாதவர்களை அல்லாஹ் நரகத்திற்குள் செலுத்துவது உனது இறைவன் யாருக்கும் அநியாயம் செய்ய மாட்டான் (18 : 49) என்ற குர்ஆன் வசனத்திற்கும் ஷைத்தான் மற்றும் அவனைப் பின்பற்றுபவர்களைக் கொண்டு அல்லாஹ் நரகத்தை நிரப்புவான் (38 : 85) என்று கூறும் குர்ஆன் வசனத்திற்கும் மாற்றமாக இந்த ஹதீஸ் இருப்பதினால் சில அறிஞர்கள் இதை மறுத்துள்ளார்கள். இக்கருத்தை இப்னு ஹஜர் அவர்கள் தனது நூலில் பதிவு செய்துள்ளார்.

فتح الباري ج: 13 ص: 437

وقد قال جماعة من الأئمة ان هذا الموضع مقلوب وجزم بن القيم بأنه غلط واحتج بأن الله تعالى أخبر بان جهنم تمتلىء من إبليس واتباعه وكذا أنكر الرواية شيخنا البلقيني واحتج بقوله ولا يظلم ربك أحد

நரகத்திற்கு புதிய படைப்பை அல்லாஹ் படைப்பான் என்று வருகின்ற இந்த இடத்தில் (தவறுதலாக) மாற்றம் நிகழ்ந்து விட்டது என்று இமாம்களில் ஒரு கூட்டத்தினர் கூறியுள்ளார்கள். இப்லீஸ் மற்றும் அவனைப் பின்பற்றுபவர்களால் நரகம் நிரம்பும் என்று அல்லாஹ் கூறியிருப்பதை ஆதாரமாக வைத்து இந்தச் செய்தி தவறு என்று இப்னுல்கய்யும் உறுதியாகக் கூறியுள்ளார். இவ்வாறே நமது ஆசிரியர் புல்கீனீ அவர்களும் உனது இறைவன் யாருக்கும் அநீதியிழைக்க மாட்டான் என்ற அல்லாஹ்வின் கூற்றை ஆதாரமாக வைத்து இந்த அறிவிப்பை மறுத்துள்ளார்.

நூல் : ஃபத்ஹுல்பாரீ பாகம் : 13 பக்கம் : 437

இந்த அறிஞர்களின் கூற்றை இமாம் அல்பானீ மற்றும் இப்னுல்கய்யும் அவர்களும் அங்கீகரித்து தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல் : அஸ்ஸஹீஹா பாகம் : 6 பக்கம் : 39

அறிவீனர்களின் வழிமுறையல்ல. அறிஞர்களின் வழிமுறை:

இப்னு ஹஜர் அவர்கள் புகாரிக்கு விளக்கவுரை எழுதியதைப் போல் ஜைனுத்தீன் என்ற இப்னு ரஜப் என்ற அறிஞரும் புகாரிக்கு விளக்கவுரை கொடுத்துள்ளார். அறிவிப்பாளர் தொடரில் குறை காணப்படாத திர்மிதி அவர்களால் சஹீஹானது என்று சொல்லப்பட்ட பின்வரும் ஹதீஸை அறிஞர்கள் குர்ஆனிற்கு முரண்படுகிறது என்ற காரணத்தினால் மறுத்துள்ளார்கள். இந்தத் தகவலை இப்னு ரஜப் தனது நூலில் பதிவு செய்கிறார்.

ولهذا المعنى رد طائفة من العلماء حديث قطع الصلاة بمرور الكلب وغيره ، وقالوا: إنه مخالف للقرآن في قوله تعالى : { وَلا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى } ளالأنعام:164ன،

நாயும், மற்றவைகளும் கடந்து செல்வதினால் தொழுகை முறிந்துவிடும் என்ற கருத்தில் வரும் ஹதீஸை அறிஞர்கள் மறுக்கிறார்கள். ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான் (6 : 164) என்ற இறைவனுடைய கூற்றுக்கு இந்த ஹதீஸ் முரண்படுகிறது என்றும் கூறுகிறார்கள்.

நூல் : ஃபத்ஹுல் பாரீ லிஇப்னி ரஜப் பாகம் : 3 பக்கம் : 342

இக்கட்டுரை ஒரு சுருக்கம் மட்டும் தான். இங்கு குறிப்பிடப்பட்டாத இன்னும் பல தகவல்கள் உள்ளன. வேறு பல கோணங்களிலும் இந்த விமர்சனத்திற்கு பதில் உள்ளது. தேவை ஏற்பட்டால் அதையும் சமுதாயத்திற்கு தெளிவுபடுத்தத் தயாராக உள்ளோம்.

அறிஞர்களின் பார்வை:

ஒரு ஹதீஸைச் சரிகாணுவதற்கு அறிஞர்கள் கடைப்பிடித்த வழிமுறையை நம்மை விமர்சனம் செய்பவர்கள் முறையாக அறிந்து கொள்ளவில்லை. அறிவிப்பாளர் தொடரில் எந்தக் குறையும் இல்லையே என்று பாமர மக்கள் கேட்பதைப் போல் கேட்கிறார்கள். அறிவிப்பாளர் தொடரில் குறை இல்லாவிட்டால் மட்டும் ஹதீஸ் சரியாகி விடும் என்ற தவறான இவர்களின் எண்ணமே இதற்குக் காரணம். ஹதீஸ் கலை மாமேதைகள் ஹதீஸைச் சரிகாணுவதற்கு இரு வழிமுறைகளைக் கடைப் பிடித்துள்ளனர்.

1. அறிவிப்பாளர் தொடரில் எந்தக் குறையும் இருக்கக் கூடாது

2. அறிவிக்கப்பட்ட செய்தியிலும் எந்தக் குறையும் இருக்கக் கூடாது.

இந்த இரண்டு நிபந்தனைகள் இருந்தால் மட்டுமே ஹதீஸ் சரியாகும். ஆனால் நம்மை விமர்சிப்பவர்கள் இந்த இரு நிபந்தனைகளில் முதலில் உள்ளதை மட்டும் எடுத்துக் கொண்டு இரண்டாவதைக் கவனிக்க மறந்து விட்டார்கள்.

ஒரு ஹதீஸில் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருந்தால் இரண்டு நிபந்தனைகளில் முதல் நிபந்தனைக்கு உட்பட்டதாக அந்த ஹதீஸ் ஆகிவிடும்.. அத்துடன் பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக அந்த ஹதீஸின் கருத்து இருக்க வேண்டும்.

1. அதன் கருத்து குர்ஆனுடன் முரண்படும் வகையில் இருக்கக் கூடாது.

2. ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கு முரண்படக் கூடாது.

3. நிரூபிக்கப்பட்ட வரலாறுக்கு முரண்படக் கூடாது.

4. முரண்பாடாக பல விதங்களில் அறிவிக்கப்படக் கூடாது.

அறிவிப்பாளர் தொடர் சரியானதாக அமைந்து ஹதீஸின் கருத்தில் மேலுள்ள குறைகளைப் போன்று ஏதேனும் இருக்குமானால் இது போன்ற நிலையில் அறிஞ:ர்கள் அந்த ஹதீஸிற்கு (சஹீஹுல் இஸ்னாத்) அறிவிப்பாளர் தொடர் சரியான செய்தி என்று மட்டுமே கூறுவார்கள். செய்தி சரி என்பதற்கு அவர்கள் அங்கீகாரத்தைத் தர மாட்டார்கள். இதற்கான சான்றுகளைப் பார்ப்போம்.

இப்னுஸ் ஸலாஹ் அவர்களின் விளக்கம்:

مقدمة ابن الصلاح - (ج 1 / ص 6)

السابع قولهم هذا حديث صحيح الإسناد أو حسن الإسناد دون قولهم: هذا حديث صحيح أو حديث حسن، لأنه قد يقال: هذا حديث صحيح الإسناد، ولا يصح، لكونه شاذا أو معللا " .

இது சஹீஹான செய்தி என்றோ அல்லது ஹசனான செய்தி என்றோ கூறாமல் இது அறிவிப்பாளர் தொடரில் சரியான செய்தி என்றோ அல்லது அறிவிப்பாளர் தொடரில் ஹசனானது என்றோ அறிஞர்கள் கூறுவதுண்டு. ஏனென்றால் (கருத்தைக் கவனிக்கும் போது) வலிமையான செய்திக்கு அது மாற்றமாக இருப்பதினால் அல்லது ஏதோ ஒரு குறை (அதிலே) இருப்பதினால் ஹதீஸ் சரியாகாமல் இருந்தாலும் இது சரியான அறிவிப்பாளர் தொடர் உள்ள செய்தி என்று சொல்லப்படும்.

நூல் : முகத்திமது இப்னிஸ்ஸலாஹ் பாகம் : 1 பக்கம் : 6

அல்குலாஸத் என்னும் நூலில் தய்யிபியின் கூற்று

 قولهم : حديث صحيح أو حسن ، وقد يصح الإسناد أو يحسن دون متنه لشذوذ أو علةا.هـ..

வலிமையான செய்திக்கு முரண்படுவதினாலோ அல்லது மறைமுகமான குறையினாலோ செய்தி சரியாகாமல் அதன் அறிவிப்பாளர் தொடர் சஹீஹ் அல்லது ஹசன் என்ற தரத்தில் அமைந்ததாக சில வேளை இருக்கும்.

இமாம் நவவீ அவர்களின் கூற்று:

لأنه قد يصح أو يحسن الإسناد ، ولا يصح ولا يحسن لكونه شاذا أو معللاا

வலிமையான செய்திக்கு முரண்படுவதினாலோ அல்லது மறைமுகமான குறையினாலோ செய்தி சரியாகாமல் அதன் அறிவிப்பாளர் தொடர் சஹீஹ் அல்லது ஹசன் என்ற தரத்தில் அமைந்ததாக சில வேளை இருக்கும்.

நூல் : அல்இர்ஷாத்

இமாம் ஹாகிமின் கூற்று:

معرفة علوم الحديث للحاكم - (ج 1 / ص 261)

وعلة الحديث ، يكثر في أحاديث الثقات أن يحدثوا بحديث له علة ، فيخفى عليهم علمه ، فيصير الحديث معلولا ،

குறை தெரியாத காரணத்தினால் நம்பகமான அறிவிப்பாளர்கள் குறையுள்ள ஹதீஸை அறிவிப்பார்கள். எனவே ஹதீஸ் குறையுள்ளதாக மாறிவிடும். நம்பகமானவர்கள் அறிவிக்கும் செய்திகளில் குறை அதிகமாக இதனால் வருகிறது.

நூல் : மஃரிஃபது உலூமில் ஹதீஸ் பாகம் : 1 பக்கம் : 261

இதே கருத்தை இப்னுல் முலக்கன் என்பவரும் இப்னு ஜமாஆ என்பவரும் கூறியுள்ளார்கள்.

நூல் : அல்மன்ஹலுர்ரவீ பாகம் : 1 பக்கம் : 37

நூல் : அல்முக்னிஃ பாகம் : 1 பக்கம் : 89

இப்னு ஜவ்ஸியின் கூற்று:

الموضوعات - (ج 1 / ص 99)

وقد يكون الاسناد كله ثقات ويكون الحديث موضوعا أو مقلوبا

சில நேரங்களில் அறிவிப்பாளர் தொடர் முழுவதும் நம்பகமானவர்களாக இருப்பார்கள். ஆனால் அந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்ட வகையைச் சார்ந்ததாகவோ அல்லது மாற்றிக் கூறப்பட்ட செய்தியாகவோ இருக்கும்.

நூல் : அல்மவ்லூஆத் பாகம் : 1 பக்கம் : 99

இப்னு தய்மியா அவர்களின் கூற்று:

مجموع الفتاوى ள جزء 18 - صفحة 47 ன

كم من حديث صحيح الإتصال ثم يقع فى أثنائه الزيادة والنقصان فرب زيادة لفظة تحيل المعنى ونقص أخرى كذلك

முழுமையான தொடரில் சரியாக இருக்கும் எத்தனையோ ஹதீஸ்களில் கூட்டுதலும், குறைத்தலும் நிகழ்ந்து விடுகிறது. சில நேரங்களில் ஒரு வார்த்தையை அதிகப்படுத்துவது அர்த்தத்தையே மாற்றி விடும். ஒரு வார்த்தையைக் குறைப்பதும் இவ்வாறே அர்த்தத்தை மாற்றி விடுகிறது.

நூல் : மஜ்மூஉல் ஃபதாவா பாகம் : 18 பக்கம் : 47

இப்னுல் கய்யும் அவர்களின் கூற்று:

الفروسية ள جزء 0 - صفحة 245 ன

وقد علم أن صحة الإسناد شرط من شروط صحة الحديث وليست موجبة لصحته فإن الحديث إنما يصح بمجموع أمور منها صحة سنده وانتفاء علته وعدم شذوذه ونكارته

அறிவிப்பாளர் தொடர் சரியானதாக அமைய வேண்டும் என்பது ஹதீஸ் சரியாகுவதற்கான நிபந்தனைகளில் ஒன்று. அறிவிப்பாளர் தொடர் சரியாக இருப்பதினால் (மட்டும்) அந்த ஹதீஸும் சரியானது என்று முடிவெடுக்க முடியாது. ஏனென்றால் பல விஷயங்கள் இருந்தால் தான் ஹதீஸ் சரியாகும். தொடர் சரியாக இருப்பதும் கருத்தில் குறை வராமல் இருப்பதும் வலிமையான தகவலுக்கு முரண்படாமல் இருப்பதும் மோசமான கருத்தைத் தராமல் இருப்பதும் இவற்றுள் அடங்கும்.

நூல் : அல்ஃபரூசிய்யா பக்கம் : 246

حاشية ابن القيم ள جزء 1 - صفحة 77

 أما قولكم إنه قد صح سنده فلا يفيد الحكم بصحته لأن صحه السند شرط أو جزء سبب للعلم بالصحة لا موجب تام فلا يلزم من مجرد صحة السند صحة الحديث ما لم ينتف عنه الشذوذ والعلة

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் சரியாக உள்ளது என்று நீங்கள் கூறுவது அந்த ஹதீஸ் சரியானது என்ற கருத்தைக் கொடுக்காது. ஏனென்றால் தொடர் சரியாக இருக்க வேண்டுமென்பது சரியான செய்தியை அறிந்து கொள்வதற்கான ஒரு நிபந்தனை தான். முழுமையான அளவுகோல் அல்ல. எனவே முரண்பாடும் குறையும் ஹதீஸை விட்டும் நீங்காத வரை அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தால் மட்டும் ஹதீஸ் சரியாகி விடாது.

நூல் : ஹாஷியதுல் இப்னில்கய்யிம் பாகம் : 1 பக்கம் : 77

சன்ஆனீயின் கூற்று:

توضيح الأفكار ள جزء 1 - صفحة 234 ன

اعلم أن من أساليب أهل الحديث أن يحكوا بالصحة والحسن والضعف على الإسناد دون متن الحديث فيقولون إسناد صحيح دون حديث صحيح لأنه يصح الإسناد لثقة رجاله ولا يصح الحديث لشذوذ أو علة

ஹதீஸ் கலை அறிஞர்கள் ஹதீஸின் தகவலைப் பற்றி பேசாமல் அறிவிப்பாளர் தொடருக்கு சரியானது ஹசனானது பலவீனமானது என்று தீர்ப்பளிப்பார்கள். இது அவர்களின் வழமை. சரியான ஹதீஸ் என்று சொல்லாமல் சரியான அறிவிப்பாளர் தொடர் கொண்டது என்று சொல்வார்கள். ஏனென்றால் இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருப்பதினால் தொடர் சரியாகி விடும். முரண்பாடு அல்லது நுட்பமான குறை (செய்தியில்) இருப்பதினால் ஹதீஸ் சரியாகாது.

நூல் : தவ்ளீஹுல் அஃப்கார் பாகம் : 1 பக்கம் : 234

கருத்தைக் கவனித்து நிராகரிக்கப்பட்டவை:

அறிஞர்கள் எத்தனையோ அறிவிப்பாளர் தொடர்களுக்கு தங்கள் புறத்திலிருந்து சரியானவை என்று தீர்ப்பு வழங்கிவிட்டு செய்தியில் உள்ள குறையினால் அதை ஏற்க மறுத்துள்ளார்கள். இந்த விதியைப் பல இடங்களில் கையாண்டுள்ளார்கள். இதற்கான சான்றுகள் பின்வருகிறது.

இமாம் இப்னு ஹஜர் :

ஜஃபர் பின் அபீதாலிப் அவர்கள் நோன்பு வைத்தவராக இரத்தம் குத்தி எடுத்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரைக் கடந்து சென்ற போது இவ்விருவரும் நோன்பை முறித்துக் கொண்டார்கள் என்று கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் இரத்தம் குத்தி எடுப்பதில் நோன்பாளிக்கு சலுகை வழங்கினார்கள். அனஸ் நோன்பு வைத்த நிலையில் இரத்தம் குத்தி எடுப்பவராக இருந்தார்.

فتح الباري - ابن حجر ள جزء 4 - صفحة 178 ன

ورواته كلهم من رجال البخاري الا أن في المتن ما ينكر لأن فيه أن ذلك كان في الفتح وجعفر كان قتل قبل ذلك

இப்னு ஹஜர் கூறுகிறார் : இதன் அறிவிப்பாளர்கள் அனைவரும் புகாரியின் அறிவிப்பாளர்கள். என்றாலும் இதில் மறுக்கப்பட வேண்டிய ஒன்று உள்ளது. ஏனென்றால் இந்நிகழ்வு மக்கா வெற்றியின் போது நிகழ்ந்ததாக வந்துள்ளது. ஜஃபர் மக்கா வெற்றிக்கு முன்பே கொல்லப்பட்டு விட்டார்.

நூல் : ஃபத்ஹுல் பாரீ பாகம் : 4 பக்கம் : 178

இமாம் நவவீ:
==========

Abdul Jabar

27 பின்னூட்டங்கள்:

அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அன்னால் மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள்

அறிஞர் பி.ஜெய்னுலாப்தீன் 20 வருடங்களுக்கு மேலாக பிரச்சாரம் செய்து வந்தாலும் குர்ஆனுக்கு முரண்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுக்க வேண்டும் என்ற அவரது நிலையும் அவரது பிரச்சாரமும் அவரிடம் அண்மையில் ஏற்பட்ட மாற்றமாகும் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆரம்ப காலப் பிரச்சாரத்தில் அவரிடம் இந்த நிலை இருக்கவில்லை.

அவரது கருத்துக்கள் மறுக்கப்படும் போது அப்போது எதிர்க்காதவர்கள் இப்போது எதிர்க்கிறார்கள் என்றால் மார்க்கத்திற்காக அல்ல தனிப்பட்ட கோபத்திற்காக எதிர்க்கிறார்கள் என்று தப்புப் பிரச்சாரம் செய்யப்படுவதுண்டு. அது தவறு, இவரது இந்தக் கருத்து அவரது புதிய நிலைப்பாடு என்பதைத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.

அத்துடன் பல தவ்ஹீத் அழைப்பாளர்கள் கொள்கையில் இருந்து தடம் புரண்டுவிட்டதாகவும் அவர் மட்டுமே அன்றிலிருந்து இன்று வரை கொள்கையில் தடம் புரளாமல் உறுதியாக இருப்பதாகவும் பேசப்படுகின்றது. இது தவறு. ஹதீஸ் துறையில் அவரிடம்தான் தடம்புரள்வு ஏற்பட்டது என்பதையும் உணர்த்தும் கடமையில் இருப்பதால் இது குறித்து சிறிது விளக்க வேண்டிய அவசியமுள்ளது.

அறிஞர் பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் காதியானிகளுடன் ஒரு விவாதம் செய்தார்கள். அந்த விவாதத்தின் மூலம் தமிழ் உலகில் காதியானிகளின் கொட்டம் அடக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். இதற்காக அவருக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். இந்தக் காதியானிகளுடன் விவாதம் தொடர்பாகக் கடிதப் பரிமாற்றம் நடந்தது. அந்தக் கடிதங்கள். ‘காதியானிகளின் கல்லறைப் பயணம்’ என்ற தலைப்பில் 1988 அக்டோபர் அல் ஜன்னத் இதழுடன் இணைத்து வெளியிடப்பட்டது.

அப்போது காதியானிகள் இப்போது இவர் இருக்கும் நிலைப்பாட்டில் தான் இருந்தனர். அவர்கள் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்க முடியாது என எழுத அதை மறுத்து பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் பல இடங்களில் எழுதியிருக்கின்றார்கள்.

உதாரணமாக:
ஆதாரபூர்வமான ஸனதுகளுடன் உள்ள ஹதீஸ்கள் என்று ஏற்கப்படும் ஹதீஸ்களை எக்காரணம் கொண்டும் மறுக்கக் கூடாது.

அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இவ்வாறே 27-05-1988 தேதியிட்ட கடிதத்தில் இரண்டாவது அம்சமாக “திருக்குர்ஆனுக்கு ஹதீஸ் முரண்படும்” என்ற உங்கள் கூற்று ஏற்க முடியாது. ஆதாரபூர்வமான எந்த ஹதீஸையும் மறுக்கவே கூடாது என்பது எங்களின் நிலை. திருக்குர்ஆனுடன் எந்த ஆதாரபூர்வமான ஹதீஸ்களும் முரண்படுகின்றது என்று நீங்கள் கூறினால் முரண்படவில்லை என நாம் நிரூபிப்போம்………..” என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு அந்தக் கடிதங்களில் பல இடங்களில் குர்ஆனுக்கு ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் முரண்படாது. சுமார் 50 ஹதீஸ்கள் அளவில் முரண்போல் தோன்றும் ஆனால் முரண் இல்லை என்று தான் அன்று கூறிவந்தார்.

இவ்வாறே 2001 ல் பி.ஜெய்னுலாப்தீன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட சுனன் திர்மதி வெளியிடப்பட்டது. இந்த மொழிபெயர்ப்பில் ‘அல்குர்ஆனும் ஆதாரபூர்வமான நபிமொழிகளும்’ என்ற தலைப்பில் முழுமையாக ஹதீஸ்களை மறுப்பவர்களுக்கு அழகானதொரு மறுப்பை பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் அளித்துள்ளார்கள்.

அதிலே ஹதீஸை மறுப்பவர்கள் நான்கு பிரதான காரணங்களை முன்வைத்து ஹதீஸ்களை மறுப்பவர்கள் குறிப்பிடுகின்றார்கள். அவையாவன:

1. ஹதீஸ்களில் முரண்பாடுகள் உள்ளன.
2. குர்ஆனுடன் ஹதீஸ்கள் முரண்படுகின்றன.
3. ஹதீஸ்களைப் பின்பற்ற வேண்டுமென்று கூறுவோர் பல கூறுகளாகப் பிரிந்து விட்டனர்.
4. குர்ஆனைப் போல் ஹதீஸ்கள் பாதுகாக்கப்படவில்லை.

என்றெல்லாம் காரணங்கள் கூறியே ஹதீஸ்களை நிராகரிக்கச் சொல்கின்றனர்.

ஹதீஸ்களைப் புறக்கணிக்க வேண்டும் என்பதற்கு இவர்கள் கூறும் இந்தக் காரணங்களை குர்ஆன் விசயத்திலும் கூற இயலும். இது பற்றி இங்கு விரிவாக அலசுவோம் என்று தொடர்கிறது அவ்விளக்கம். (சுனன் திர்மிதி நூல் அறிமுகம் A25)

மொத்தமாக ஹதீஸ்களை மறுப்பதற்குக் கூறப்பட்ட நான்கு காரணங்களில் மூன்றாவது காரணம் தவிர மற்றைய மூன்று காரணங்களையும் கூறி இன்று பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் ஆதாரபூhவமான ஹதீஸ்களை மறுக்கின்றார்.

இதில் அச்சப்பட வேண்டிய மற்றுமொரு அம்சமுண்டு. இந்த குறைகளைக் குர்ஆன் விசயத்திலும் கூற முடியம் என்று வேறு குறிப்பிட்டுள்ளார்கள். இது ஹதீஸுடன் மட்டும் நிற்குமா? குர்ஆனுக்கும் தாவுமா? என்று அச்சப்பட வேண்டியுள்ளது. இவர் இவ்வளவுடன் நின்று கொண்டாலும் இவருக்குப் பின்னால் இதே அடிப்படையில் வருபவர் குர்ஆன் விசயத்திலும் கூட ஐயம் எழுப்ப வாய்ப்புள்ளதையே இது எடுத்துக் காட்டுகின்றது.

இதுவரை நாம் குறிப்பிட்டதிலிருந்து குர்ஆனுக்கு முரண்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுக்க வேண்டும் என்ற அவரது தவறான நிலைப்பாடு 2002க்குப் பின்னர்தான் அவரிடம் எற்பட்ட கொள்கைத் தடம்புரள்வே தவிர இருபது வருட பிரச்சாரத்தில் கிடையாது என்பதைப் புரிந்திருப்பீர்கள்.

அடுத்தாக ஆரம்பத்தில் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை மட்டும் குர்ஆனைப் பாதுகாப்பதற்காக மறுக்க வேண்டும் எனக் கூறியவர்கள் பின்னர் விஞ்ஞானத்திற்கு முரண்படுகிறது என்ற காரணத்தினாலும் ஹதீஸ்களை மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Haja Mohideen said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

முன்னோர்களை பின்பற்ற கூடாது ஆராயாமல் pj -யை மட்டும் பின்பட்ட்ரலமா?

M.I.அப்துல் ஜப்பார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

பி ஜே ஹதீஸ்களை மறுக்கிறார் மறுக்கிறார் என்று சொல்லுகிறீர்களே தவிர எந்த ஹதீஸை மறுக்கிறார் என்று நீங்கள் சொல்லவில்லை எனவெ எந்த எந்த ஹதீஸ்களை மறுக்கிறார் என்று உங்களால் சொல்லமுடியுமா? அப்படி நீங்கள் சொல்லிவிட்டால் அதற்கு த த ஜ விடம் விளக்கம் பெற ஏதுவாக இருக்கும்

அதிரை என்.ஷஃபாத் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இந்தக் கட்டுரையின் தலைப்பு " குர்ஆனுடன் முரண்படும் ஸஹீஹான (அறிவிப்பாளர் அடிப்படையில்) ஹதீஸ்களை பற்றிய அறிஞர்களின் கருத்து என்ன" என்பது ஆகும். ஆனால் கட்டுரையின் தொடக்கத்திலேயே பி.ஜே என்னும் தனிமனிதரைப் பற்றிய வரிகளுடன் தொடங்கிய காரணத்தால் பி.ஜே பற்றியே பின்னூட்டங்களாகவே இடப்படுகின்றன.

கட்டுரையின் சாராம்சத்தை மறந்து விட்டு, தனிமனிதரைப் பற்றிய விவாதங்களை தவிர்த்தல் நலம் என்பது என் கருத்து.

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இந்த விசயத்தில் மிகக்கவனம் தேவை.... சில ஹதீஸ்கள் இக்காலத்திற்கு பொருந்தாது என்பதற்காக அதை நிராகரிப்பது அறிவீனர்களின் செயல்.

அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இஸ்லாமிய வரலாற்றில், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுத்தவர்கள் யார் என்பதை மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி அவர்களின் உரையை கேட்க்க கீல உள்ள லின்க் சொடுக்கவும்....

http://www.islamkalvi.com/portal/?p=6126

M.I.அப்துல் ஜப்பார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

எந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுத்தார்கள் அது எந்த ஹதீஸ்கள் என்று ஏன் சொல்லுவதற்கு தயங்குகிறீர்கள். ஒரு ஹதீஸ்களையாவது இங்கு நீங்கள் குறிப்பிடுங்கள் இல்லை என்றால் நீங்கள் கண்முடிதனமாக ஸலஃபிகள் சொல்வதை பின்பற்றுகிறிர்கள். புது ஸலஃபி மதகபை உருவாக்குகிறீர்கள் என்றுதான் என்னவேண்டியிருக்கிறது ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லி அதை உண்மையாக்க முயற்சிகாதீர்கள்.

அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

//பிஜே ஹதீஸ்களை மறுத்துவிட்டார் என்று விமர்சனம் செய்யும் யாரும் பிஜே மறுத்துள்ள ஹதீஸ்களை செயல்படுத்தவில்லை என்பது குறிப்பிடதக்கது (தேவைப்பட்டால் ஹதீஸ்களின் பட்டியல் வெளியிடப்படும்). ஹதீஸ்களின் பட்டியலை வெளியிட்டால் பிஜே ஹதீஸ்களை மறுக்கிறார் என்று விமர்சனம் செய்பவர்களின் உண்மை முகம் (ஹதீஸ்களை மறுக்கும் முகம்) தெரியவரும்.//

அன்புச் சகோதரரே...
பிஜே மறுத்துள்ள ஹதீஸ்களை செயல்படுத்தவில்லை என்பது குறிப்பிடதக்கது ”தேவைப்பட்டால் ஹதீஸ்களின் பட்டியல் வெளியிடப்படும்” என்றுதான் எழுதி இருந்தீர்கள்.... அப்படி பிஜேவாள் மறுத்துள்ள ஹதீஸ்களீன் பட்டியல் வேளியிடுங்கள், தாங்கள் புறிந்து கொள்விர்கள். அன்னனுடைய ஆய்வு எவ்வாறு என்று...

இங்கு ஒரு விடயத்தை மாத்திரம் சொல்கிரேன்...

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
'நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, 'என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்' என்று கூறுவான்'.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். புகாரி1145

அல்லாஹ்வின் அஸ்மாவத் சிஃபாத் விடயத்தில் அன்னனின் சொந்த கருத்தை ஹதிஸ்ல் போட்டு அல்லாஹ்வின் பன்பை மறுத்துள்ளார்....அல்லாஹ் இறங்க விள்ளை அல்லாஹ்வின் அருள்தான் என்று..

சகோதரர் ஜுபைர் அவர்களே! அவர்களிடம் கேளுங்கள் தங்களுடைய இந்த கட்டுரையில் இவ்வாறு போட்டு இருகிரீர்களே, (தேவைப்பட்டால் ஹதீஸ்களின் பட்டியல் வெளியிடப்படும்). அதை ஒரு தொகுப்பாக இங்கு வேளியிடுங்களேன்.இந்த சமுக புரிந்து கொள்ளும்,

// புது ஸலஃபி மதகபை உருவாக்குகிறீர்கள் என்றுதான் என்ன வேண்டியிருக்கிறது //

உங்களுக்கு இது புதுஷாக தெரியலாம். ஸலஃபி என்றால் என்ன, அவர்கள் யார், அவர்கள் எவ்வாறு குர் ஆன் சுன்னாவை பெற்றுக்கொண்டார்கள், அதை நம்முடையகாலம் வரை எவ்வாறு வந்து சேர்ந்தது. எனபதை படியிங்கள்.

அல்லது எமது இனயதளத்தில் இருந்து படித்து பயன் பெருங்கள்....
http://tamilsalafi.edicypages.com/694778205264

அப்பறம் சொல்லுங்கள் ஸலஃபி என்பது மதுகபா? அல்லது அன்னனை கண் மூடி பின் பற்றும் இவர்கள் புது பிஜே மதுகபா????? என்று.

muslimmalar said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

//பிஜே ஹதீஸ்களை மறுத்துவிட்டார் என்று விமர்சனம் செய்யும் யாரும் பிஜே மறுத்துள்ள ஹதீஸ்களை செயல்படுத்தவில்லை என்பது குறிப்பிடதக்கது (தேவைப்பட்டால் ஹதீஸ்களின் பட்டியல் வெளியிடப்படும்). ஹதீஸ்களின் பட்டியலை வெளியிட்டால் பிஜே ஹதீஸ்களை மறுக்கிறார் என்று விமர்சனம் செய்பவர்களின் உண்மை முகம் (ஹதீஸ்களை மறுக்கும் முகம்) தெரியவரும்//

தேவைபட்டால் ஹதிஸ் பட்டியல் வெளியிட படும் என்று கூறினீர்கள் அல்லவே தயவு செய்து வெளியிடுங்கள்....
யாரும் புது மத்ஹபை உருவாக்கவில்லை... கண் மூடி தனமாக பின்பற்றுபவர்கள் சலபிகள் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்....
சகோ:அபு அப்துல்லாஹ் முஹம்மது யூசுப் சலபியின் கமெண்ட்ஸ் ஏன் வெளியீடபடுவதில்லை.....

M.I.அப்துல் ஜப்பார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

பி ஜே ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுக்கிறார் என்று முதலில் நீங்கள் சொன்னீர்கள் எனவே பி ஜே மறுக்கின்ற ஹதீஸ்களில் ஒன்றாவது adiraibbc வாசகர்களுக்கு முதலில் நீங்கள் சொல்லுங்கள் இல்லை என்றால் புது ஸலஃபி மத்ஹபை உருவாக்கின்றீர்கள் என்று என்னவேண்டியிருக்கிறது. (ஒரு குற்றத்தை ஒருவர் மீது சுமத்துவதற்கு முன்பு இந்த குற்றச்சாட்டு உண்மைதான என்று யோசித்து எழுதவேண்டும்) பிறகு நாங்கள் பட்டியல் வெளியிடுகிறோம்.

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

பி ஜெ அவர்கள் பல ஹதீஸ்களை அவருடைய தனிப்பட்ட சிந்தனைக்கு எட்டவில்லை என்பதற்காக நிராகரித்துள்ளார் என்பதற்கு பல சான்றுகள் இருக்கத்தான் செய்கின்றன.... இது ஒரு மறுக்க முடியாத உண்மை அதே நேரத்தில் சலபு சாலிஹீன் கொள்கையை கையில் எடுப்பது தீர்வாகாது. யா அல்லாஹ் இவ்வுலக குழப்பத்திலிருந்து எங்களுக்கு தெளிவான வழியை காட்டுவாயாக.

M.I.அப்துல் ஜப்பார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

\\இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
'நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, 'என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்' என்று கூறுவான்'.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். புகாரி1145\\


இறைவன் முதல் வானத்திற்கு இறங்கி வருவதை இறங்கி வருவதாகவே நம்ப வேண்டும். வேறு பொருள் எடுக்கக் கூடாது என்று முடிவு பண்ணினால் இறைவன் முதல் வானத்திலேயே இருந்து விடுவான் என்று தான் நம்ப வேண்டி வரும்.

பூமி உருண்டை வடிவம் என்பதால் அதில்ஒவ்வொரு வினாடியும் – ஒவ்வொரு மைக்ரோ வினாடியும் – ஓர் உதிப்பும் ஒரு மறைவும் ஏற்படுகிறது. இதை மெய்பிக்கும் விதமாக பல கிழக்குகள் பல மேற்குகள் பற்றி குர்ஆன் பேசுகிறது. (பார்க்க 70:40)

ஒவ்வொரு மைக்ரோ வினாடியும் இந்த பூமியின் எங்காவது ஓர் இடத்தில் மூன்றாம் இரவு இருந்துக் கொண்டே இருக்கிறது. மூன்றாம் இரவில் இறைவன்
இறங்குகிறான் என்றால் – ஒவ்வொரு மைக்ரோ வினாடியும் மூன்றாம் இரவு இருந்துக் கொண்டு இருப்பதால் இறைவன் இங்கேயே இருக்க வேண்டிய நிலை தான் ஏற்படும் – அதாவது மேலதிக விளக்கம் தேவையில்லை என்றால் இப்படிதான் நம்பவேண்டி வரும்.

ஆனால்.இறைவன் அர்ஷில் இருப்பதாக குர்ஆன் தெளிவாக அறிவிக்கிறது (பார்க்க 7:45 – 10:3 – 13:2 – 20:5 – 25:59 – 32:4 – 40:7 – 57:4 – 69:17)

இறைவன் முதல் வானத்தில் நிரந்தரமாக இருந்து விடுவான் என்று நம்புவது இந்த வசனங்களுக்கு முரண்பாடான – அர்த்தமற்ற – நம்பிக்கையாகி விடும்.

இறைவனின் வசனங்களுக்குறிய முக்கியத்துவத்தை கொடுக்காமல் ஹதீஸ்களை மட்டுமே கற்று அதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து பிரச்சாரம் செய்வோர் வேண்டுமானால் இந்த வசனங்களை கண்டுக் கொள்ளாமல் விட்டு விடலாம்.

M.I.அப்துல் ஜப்பார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தொடர்ச்சி....

வசனங்களுக்கு விளக்கமாகத்தான் நபியின் சொல் அமைந்திருக்கும் என்று தெளிவான முடிவில் இருப்போர் அந்த வசனங்களுக்கு முரண்படாமல் தான் இந்த - இத்தகைய – ஹதீஸ்களை விளங்குவார்கள்.

‘இறங்கி வருதல்’ என்பது இறைவன் அர்ஷிலிருந்து இடம் பெயர்கிறான் என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டிருக்காது. மாறாக இரவில் எல்லோரும் உறங்கும் போது இறைவனுக்கு அஞ்சி – அவனை நேசித்து – எழுந்து வணங்குபவர்களுக்கு
இறைவனின் அருள் பார்வை பிரத்யேகமாக கிடைக்கிறது என்ற அர்த்தத்தில் தான்
சொல்லப்பட்டிருக்கும்.

இறைவனுக்காக ஒருவர் தன் உறக்கத்தை தியாகம்
செய்யும் போது அவரை இறைவன் விஷேஷமான அந்தஸ்த்தில் கவனிக்கிறான் என்பதே அந்த ஹதீஸின் பொருளாக இருக்கும் என்பதை நாம் மேலே கொடுத்துள்ள குர்ஆன் வசனங்கள் இனி வரக்கூடிய ஹதீஸ் ஆகியவற்றை வைத்து சிந்திக்கும் போது விளங்கலாம்.

இறைவனின் தன்மையைப் பற்றி வரும் செய்திகளுக்கு மேலதிக விளக்கம் கொடுக்கக்கூடாது அப்படியே மௌனமாக நம்பி விட வேண்டும் என்று சொல்லக் கூடியவர்கள் கீழுள்ள ஹதீஸூக்கு தங்கள் நிலையிலிருந்து இறங்கி வந்து விளக்கம் கொடுக்கத்தான் செய்கிறார்கள்.

ஓர் அடியான் கடமையான காரியங்களை செய்வதன் மூலம் தான் இறைவனை நெருங்க முடியும். கடமையான காரியங்களுக்கு பிறகு உபரியான காரியங்களை செய்து இறைவன் பால் நடந்தால் இறைவன் அந்த அடியானை நோக்கி நடக்கிறான். அடியான் இறைவனை நோக்கி ஓடினால் அவனை நோக்கி இறைவன் ஓடி வருகிறான் இறுதியில் அவன்
பார்க்கும் பார்வையாகவும். பிடிக்கும் கைகளாகவும். நடக்கும் கால்களாகவும் இறைவன் மாறி விடுகிறான் அவன் எதை கேட்டாலும் கொடுக்கிறான். நாம் பரவலாக கேள்விப்படும் பிரபல்யமான – ஆதாரப்பூர்வமான – ஹதீஸ் இது.

இந்த ஹதீஸூக்கு மேலதிக விளக்கம் கொடுக்காமல் மௌனம் சாதித்து ஏற்கும் போது மனிதன் இறைத்தன்மையை பெற முடியும் என்ற பொல்லாத கருத்து உருவாகிறது.இன்றைக்கும் பலர் நாங்கள் வணக்க வழி பாட்டின் மூலம் இறைத்தன்மையை பெற்று விட்டோம் என்று -நேரடியாக சொல்லா விட்டாலும் – செய்கையின் மூலம் மக்களை
ஏமாற்றிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.
அடியானின் பார்வையாகவும் – கைகளாகவும் – கால்களாகவும் இறைவன் மாறுகிறான் என்பது ஹதீஸின் நேரடிப் பொருள். அதாவது இறைத் தன்மையை எடுத்துக் காட்டும் வாசகம் இது. இதற்கு மேலதிக விளக்கம் தேவையில்லை அப்படியே நம்ப வேண்டும் என்று கருதினால் மனிதன் தொடர் வணக்கத்தின் வழியாக இறைத் தன்மையைப் பெறுகிறான் என்பதை தவிர வேறு பொருள் எடுக்க முடியாது. கப்ரு வணக்கம்.
அவ்லியா வழிப்பாடு போன்ற கேடு கெட்ட இணை வைத்தல் போன்ற காரியங்கள் மார்க்கத்தின் பெயரால் அரங்கேறுவதற்கு இந்த ஹதீஸை நேரடியாக புரிந்துக் கொள்ளும் தன்மையே வழி வகுக்கிறது.

இதையெல்லாம் தெளிவாக உயர்ந்த அக்கறையுள்ள அறிஞர்கள் ‘இத்தகைய ஹதீஸ்களுக்கு நேரடி பொருள் கொள்ளக் கூடாது இறைவன் பிறரது கைகளாகவோ. கால்களாகவோ. பார்வையாகவோ மாற மாட்டான் ஏனெனில் அவனுக்கு நிகராக
எதுவுமில்லை என்று அவனே தெளிவாக அறிவித்து விட்டான். அதனால் இந்த ஹதீஸ் நல்லடியார்களுக்கு இறைவனின் உதவி மிக மிக நெருக்கத்தில் இருக்கிறது.

நெருக்கம் என்றால் அளவிட்டு சொல்ல முடியாத அளவுக்கு உள்ள நெருக்கம் என்பது தான் அந்த ஹதீஸின் பொருள் என்று தீமைக்கு வழி வகுக்காத விளக்கம் கொடுக்கிறார்கள். இப்படி விளக்கம் கொடுப்போரில் ‘இறைத் தன்மைக்கு மேலதிக
விளக்கம் கொடுக்கக் கூடாது’ என்று சொல்வோரும் அடங்குவர். பிற ஆதாரங்கள் – வாதங்களின் அடிப்படையில் இந்த விளக்கம் சரி என்றால் அதே
போன்ற ஆதாரங்கள் – வாதங்களின் அடிப்படையில் சொல்லப்படும் இறைவன் முதல் வானத்திற்கு இறங்கி வரமாட்டான் – அந்த ஹதீஸூக்கு நேரடி பொருள் கொள்ளக்கூடாது என்ற வாதம் மட்டும் எப்படி தவறாகும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள்
சிந்திக்க வேண்டும்.

எனவே இறைவன் முதல் வானத்திலேயே இருந்து விடுவான் என்று நம்பத் தேவையில்லை.
இதை வாசித்தவுடன் வீண்விமர்சிகர்களின் வாதம் அடிப்படையற்றது என்பது புலனாகியிருக்கும் என எண்ணுகின்றேன். இவர்கள் கொள்கைக்காக
விமர்சிக்கவில்லை. ஏனெனில் பீஜேவை விமர்சிக்கும் 99 வீதமானோருக்குக்
கொள்கை இல்லையே. அவரால் தூக்கி எறியப்பட்டோரும் மார்க்கத்தைப்
பயன்படுத்தி பிழைப்பு நடாத்த முடியாதோரும் தான் அதிகம் விமர்சிக்கின்றனர்.

கொள்கையற்ற இவர்களின் விமர்சினம் கொள்கைக்கான விமர்சனம் அல்ல என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன.

அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

// \\இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
'நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, 'என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்' என்று கூறுவான்'.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். புகாரி1145\\ //

இறைவன் முதல் வானத்திற்கு இறங்கி வருவதை இறங்கி வருவதாகவே நம்ப வேண்டும். வேறு பொருள் எடுக்கக் கூடாது என்று முடிவு பண்ணினால் இறைவன் முதல் வானத்திலேயே இருந்து விடுவான் என்று தான் நம்ப வேண்டி வரும்.//

அன்புச் சகோதரர்களே...
அல்லாஹ்வை ஈமான் கொள்வதில் சில அடிப்படையான விஷயங்களை அறிந்து கொள்வோம்

குர் ஆன் ஹதீஸில் கூறப்பட்டுள்ள அல்லாஹ்வின்தன்மைகளில், செயல்களில் ,எப்படி? என்று வினா எழுப்ப கூடாது

அல்லாஹ்வின் தன்மைகளில்,செயல்களில் நமது அறிவைக் கொண்டு எவ்வித கருத்து மாற்றமோ பொருள் மாற்றமோ செய்யக்கூடாது
அல்லாஹ்வின் தன்மைகளுக்கும் ,செயல்களுக்கும் படைப்பினங்களின் செயல்களையும் ,தன்மைகளையும் உவமையாக கூறக்கூடாது
படைப்பினங்களின் தன்மைகளைக்கொண்டும் செயல்களைக்கொண்டும் அல்லாஹ்வின் செயல்களையும் ,தன்மைகளையும் விவரிக்க கூடாது .

அல்லாஹ்வின் தன்மைகள் செயல்கள் பற்றி கூறப்பட்டுள்ள குர் ஆனின் வசனங்களை பொருளற்றவை என்று கூறக்கூடாது .

அல்லாஹ் அர்ஷின் மேல் உயர்ந்துள்ளான். அதே நேரம், ஒவ்வொரு கடைசி இரவிலும், கீழ் வானத்தில் இறங்குவான்.அவன் இறங்கும் தன்மையை நம்மால் விளங்க முடியாது.எப்படி அவனின் முகம் அவனுக்கு மட்டுமே பொருந்துமோ, அவனின் முகத்தை போல எதுவும் இல்லையோ,அதே போல அவன் இறங்கும் தன்மையையும் நம்மால் புரிய முடியாது. அவன் இரங்குவதை (இரங்கினால், அர்ஷ் காலி என்று ) மனிதன் இரங்குவது போல ஒப்பிடு செய்தால், அது அல்லாஹ் வை மனிதனுக்கு இனையாக நினைக்கும் ஷிர்க். பூமி உருண்டை, அதனால் இரவு எங்கும் இருக்கு என்று அறிவியல் உபயோகித்து சொல்பவர்கள், அறிவியலின் முலூ விவரம் தெரியாதவர்கள். அறிவியல் என்பது நாளுக்கு, நாள் மாருப்படும். அதை உபயோகித்து, ஒரு அக்கீதா வின் நம்பிக்கையை தீர்மானிக்க முடியாது. இவர்கள் சொல்வது அறிவியலுக்கும் பொருந்தாது என்பது தான் உண்மை.ஆல்பர்ட் ஐன்ஸ்டின் என்பவர், "நேரம்" என்பது வின்-வெழியில், வேரு மாதிரி இருக்கும் என்றார்.பூமிக்கு வெழியில், நமது நேரம் போல இருக்காது என்பது தான் அறிவியலும் சொல்கிறது.

நான் அறிவியல் கண்டுப்பிடிப்புகளை வைத்து அல்லாஹ் வை பற்றி வர்னிப்பதை முற்றிலும் ஆதரிக்க மாட்டேன். இவர்கள் எந்த அறிவியலை வைத்து அல்லாஹ் வை வர்னிக்கிறார்களோ, அதை பற்றிய அரைக்குரை அறிவை வைத்து தான் செய்கிறார்கள். அல்லாஹ் எப்படி அர்ஷின் மீது உயர்ந்தான் ??? என்பதை கேள்வி கேட்ப்பதே பித் ஆ, என்று இமாம் மாலிக் (ரஹீ) சொன்னார்கள்.ஆனால், "அல்லாஹ் அர்ஷின் மீது எப்படி உயர்ந்தான்" என்பதை புரிந்து வைத்தது போல, "அல்லாஹ் அர்ஷின் மீது அமர்ந்தான்" அதாவது" உட்கார்ந்தான்" என அல்லாஹ் வின் மீது இட்டு கட்டினார் பீ.ஜே. "இஸ்தவா" என்பது ஒரு பொதுவான சொல். இதர்க்கு உட்காருவது என்று அர்த்தம் செய்து, அல்லாஹ் வின் இஸ்தவா வை "எப்படி செய்தான்" என்று வர்னிக்கும் பீ.ஜே வுக்கு "அல்லாஹ் எப்ப்டி இரங்கினான்?" என்று வர்னிப்பது சாதாரன ஒன்று தான்.பீ.ஜே வின் வழிகேட்டை மக்கள் உணரவேண்டும்.

அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

//பிஜே ஹதீஸ்களை மறுத்துவிட்டார் என்று விமர்சனம் செய்யும் யாரும் பிஜே மறுத்துள்ள ஹதீஸ்களை செயல்படுத்தவில்லை என்பது குறிப்பிடதக்கது (தேவைப்பட்டால் ஹதீஸ்களின் பட்டியல் வெளியிடப்படும்). ஹதீஸ்களின் பட்டியலை வெளியிட்டால் பிஜே ஹதீஸ்களை மறுக்கிறார் என்று விமர்சனம் செய்பவர்களின் உண்மை முகம் (ஹதீஸ்களை மறுக்கும் முகம்) தெரியவரும்.//

அன்புச் சகோதரரே...
பிஜே மறுத்துள்ள ஹதீஸ்களை செயல்படுத்தவில்லை என்பது குறிப்பிடதக்கது ”தேவைப்பட்டால் ஹதீஸ்களின் பட்டியல் வெளியிடப்படும்” என்றுதான் எழுதி இருந்தீர்கள்.... அப்படி பிஜேவாள் மறுத்துள்ள ஹதீஸ்களீன் பட்டியல் வேளியிடுங்கள், தாங்கள் புறிந்து கொள்விர்கள். அன்னனுடைய ஆய்வு எவ்வாறு என்று...

இந்த கட்டுரையை பதித்த அப்துல் ஜப்பார் என்பர் எங்கே போய் ஒடி ஒளிந்தார் என்று தெரிய வில்லை.

அப்துல் ஜப்பார் அவர்களே இங்கு கேட்க்க படுவது தாங்கள், இந்த கட்டுரையில் என்ன போட்டு இருந்திர்களோ அதைதான்... அதை வெளியிடுங்கள்,அது போன்ற ஹதிஸ்களை எவ்வாறு விளங்கவேண்டும் என்று அஹ்லுஸ் ஸுன்னாவின் (உன்மையான தவ்ஹீத் உலமாக்களின்) விளக்கம் உங்களை வந்து சேரும்...இன்ஷா அல்லாஹ்.

நீங்கள் ரொம்ப பெரிய விளக்கம் எதுவும் தர வேண்டிய அவசியம் இல்லை, ஹதிஸையிம் அதனுடைய எண்னும் கொடுத்தால் போதும் அதற்க்கான விளக்கம் அஹ்லுஸ் ஸுன்னாவின் விளக்கம் பெற்று தர படும். இன்ஷா அல்லாஹ்....

அல்லாஹ் அஃலம்.

M.I.அப்துல் ஜப்பார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

\\அல்லாஹ்வின் தன்மைகளில்,செயல்களில் நமது அறிவைக் கொண்டு எவ்வித கருத்து மாற்றமோ பொருள் மாற்றமோ செய்யக்கூடாது
அல்லாஹ்வின் தன்மைகளுக்கும் ,செயல்களுக்கும் படைப்பினங்களின் செயல்களையும் ,தன்மைகளையும் உவமையாக கூறக்கூடாது
படைப்பினங்களின் தன்மைகளைக்கொண்டும் செயல்களைக்கொண்டும் அல்லாஹ்வின் செயல்களையும் ,தன்மைகளையும் விவரிக்க கூடாது\\

இறைவனின் தன்மையைப் பற்றி வரும் செய்திகளுக்கு மேலதிக விளக்கம் கொடுக்கக்கூடாது அப்படியே மௌனமாக நம்பி விட வேண்டும் என்று சொல்லக் கூடியவர்கள் கீழுள்ள ஹதீஸூக்கு தங்கள் நிலையிலிருந்து இறங்கி வந்து விளக்கம் கொடுக்கத்தான் செய்கிறார்கள்.

ஓர் அடியான் கடமையான காரியங்களை செய்வதன் மூலம் தான் இறைவனை நெருங்க முடியும். கடமையான காரியங்களுக்கு பிறகு உபரியான காரியங்களை செய்து இறைவன் பால் நடந்தால் இறைவன் அந்த அடியானை நோக்கி நடக்கிறான். அடியான் இறைவனை நோக்கி ஓடினால் அவனை நோக்கி இறைவன் ஓடி வருகிறான் இறுதியில் அவன்
பார்க்கும் பார்வையாகவும். பிடிக்கும் கைகளாகவும். நடக்கும் கால்களாகவும் இறைவன் மாறி விடுகிறான் அவன் எதை கேட்டாலும் கொடுக்கிறான்.

இதையெல்லாம் தெளிவாக உயர்ந்த அக்கறையுள்ள அறிஞர்கள் ‘இத்தகைய ஹதீஸ்களுக்கு நேரடி பொருள் கொள்ளக் கூடாது இறைவன் பிறரது கைகளாகவோ. கால்களாகவோ. பார்வையாகவோ மாற மாட்டான் ஏனெனில் அவனுக்கு நிகராக
எதுவுமில்லை என்று அவனே தெளிவாக அறிவித்து விட்டான். அதனால் இந்த ஹதீஸ் நல்லடியார்களுக்கு இறைவனின் உதவி மிக மிக நெருக்கத்தில் இருக்கிறது.

M.I.அப்துல் ஜப்பார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ஹதீஸ்கள் பட்டியலை நாம் கண்டிப்பாக வெளியிடுவோம், இன்ஷா அல்லாஹ்.

நிங்கள் சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு நாங்கள் விளக்கம் தந்துவிட்டோம் குர்ஆனுடன் முரண்படும் ஹதீஸ்களை எவ்வாறு அணுகுவது என்பதை பற்றியும், (முழுமையாக படிக்க http://www.adiraitntj.com/2011/12/blog-post_1087.html) ஸஹாபாக்களை பின்பற்றுவது பற்றியும் நாம் வெளியிட்ட கட்டுரைகளுக்கு நீங்கள் பதில் சொல்லாமல் இருப்பது ஏன்? அவற்றுக்கு நீங்கள் பதில் சொன்ன பிறகு, நாம் ஹதீஸ்கள் பட்டியலுக்கு வருவது நன்றாக இருக்கும்.

ஸலபிகளின் விளக்கங்களை அள்ளிப்போடுங்கள். பிறகு பட்டியல் வரும்.

பிஜே சரியானவர்களிடம் படிக்கவில்லை என்ற உங்களின் வாதத்திற்கு நாங்கள் தந்த மறுப்பிற்கு உங்களின் பதில் எப்போது வரும்?

ஒன்று உங்களின் வாதம் தவறு என்ற ஒத்துக்கொள்ளுங்கள், இல்லையென்றால், பதில் தாருங்கள்.

இவர்களின் சொத்தை வாதங்களும் அதற்கு தக்க பதிலையும் விரிவாக கான http://www.adiraitntj.com/

அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அஸ்லாமு அலைக்கும் வரஹ்

அன்னன் பீஜே அவர்களை கண் மூடி பின்பற்றும் இவர்கள், என்ன சொல்கிரார்கள் என்பதை பாருங்கள்.

//நிங்கள் சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு நாங்கள் விளக்கம் தந்துவிட்டோம் //

என்ன பதில் சொல்லிவிட்டீர்கள்...அன்னன் மறுக்கும் ஹதிஸ்கலை வேளியிடுவோம் என்று எழுதி இருந்தவர்கள்...பின் வாங்கி ஓடுவது ஏன்?

பதில் சொல்ல முடியாமல் ஓடும் பிஜே மதுகபினர்.....

உங்கள் அன்னன் வாயால் அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாத் என்றால் யார்?
என்று சொன்ன உரையை கேலுங்கள்.

”நபி(ஸல்) அவர்களையும், அவர்களின் தோழர்கள் எதில் ஏகோபித்த முடிவில் இருந்தார்களோ அதனையும் பின்பற்றுபவர்கள்தான் அஹ்லுல் சுன்னத் வல்ஜமாஅத் என்பவர்களாகும். அவர்கள்தான் 73 கூட்டத்தினரில் சொர்க்கம் புகக்கூடியவர்கள்.” -மவ்லவி பி.ஜைனுல் ஆபிதீன்

இன்னும் விளக்கமாக கேட்க கீழ்கண்ட கிளிப்-ஐ பதிவிறக்கம் செய்து கேட்கவும். http://www.islamkalvi.com/sunnath_wal_jamaath/

அல்லாஹ் அஃலம்.

எச்சரிக்கை....எச்சரிக்கை......

தவ்ஹீதின் பெயரால் வழிகேட்டை போதிக்கும் ..adirai..tntj..இனைய தளம்...இது போன்ற வழி கேடர்களின் இணய தளத்தில் இள்மை பெற்றால் ஹதிஸ்கலை மறுக்கும் போக்கை நமது சமுகத்தில் உருவாக்கி குர் ஆன் சுன்னாவிற்க்கு எதிரான கொள்கையின் பக்கம் செல்ல நேரிடும்.....

M.I.அப்துல் ஜப்பார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ஸலஃபிகளின் முரன்பாடு

\\அல்லாஹ்வின் தன்மைகளில்,செயல்களில் நமது அறிவைக் கொண்டு எவ்வித கருத்து மாற்றமோ பொருள் மாற்றமோ செய்யக்கூடாது
அல்லாஹ்வின் தன்மைகளுக்கும் ,செயல்களுக்கும் படைப்பினங்களின் செயல்களையும் ,தன்மைகளையும் உவமையாக கூறக்கூடாது
படைப்பினங்களின் தன்மைகளைக்கொண்டும் செயல்களைக்கொண்டும் அல்லாஹ்வின் செயல்களையும் ,தன்மைகளையும் விவரிக்க கூடாது\\

இறைவனின் தன்மையைப் பற்றி வரும் செய்திகளுக்கு மேலதிக விளக்கம் கொடுக்கக்கூடாது அப்படியே மௌனமாக நம்பி விட வேண்டும் என்று சொல்லக் கூடியவர்கள் கீழுள்ள ஹதீஸூக்கு தங்கள் நிலையிலிருந்து இறங்கி வந்து விளக்கம் கொடுக்கத்தான் செய்கிறார்கள்.

ஓர் அடியான் கடமையான காரியங்களை செய்வதன் மூலம் தான் இறைவனை நெருங்க முடியும். கடமையான காரியங்களுக்கு பிறகு உபரியான காரியங்களை செய்து இறைவன் பால் நடந்தால் இறைவன் அந்த அடியானை நோக்கி நடக்கிறான். அடியான் இறைவனை நோக்கி ஓடினால் அவனை நோக்கி இறைவன் ஓடி வருகிறான் இறுதியில் அவன்
பார்க்கும் பார்வையாகவும். பிடிக்கும் கைகளாகவும். நடக்கும் கால்களாகவும் இறைவன் மாறி விடுகிறான் அவன் எதை கேட்டாலும் கொடுக்கிறான்.

இதை எப்படி விளங்குவது என்று இன்னும் பதில் சொல்லவில்லை.

\\அன்னன் பீஜே அவர்களை கண் மூடி பின்பற்றும் இவர்கள், என்ன சொல்கிரார்கள் என்பதை பாருங்கள்.

என்ன பதில் சொல்லிவிட்டீர்கள்...அன்னன் மறுக்கும் ஹதிஸ்கலை வேளியிடுவோம் என்று எழுதி இருந்தவர்கள்...பின் வாங்கி ஓடுவது ஏன்?

பதில் சொல்ல முடியாமல் ஓடும் பிஜே மதுகபினர்.....\\

நாம் பதிலை (ஆடியோ, விடியோ இருப்பதால்)http://www.adiraitntj.com/ குறிப்பிட்டு இருந்தும் இல்லை என்கிறார் தெளிவாக படிக்கவும். பிறகு அவர் சொல்வது.

\\எச்சரிக்கை....எச்சரிக்கை......

தவ்ஹீதின் பெயரால் வழிகேட்டை போதிக்கும் ..adirai..tntj..இனைய தளம்...இது போன்ற வழி கேடர்களின் இணய தளத்தில் இள்மை பெற்றால் ஹதிஸ்கலை மறுக்கும் போக்கை நமது சமுகத்தில் உருவாக்கி குர் ஆன் சுன்னாவிற்க்கு எதிரான கொள்கையின் பக்கம் செல்ல நேரிடும்.....\\

முதலி்ல் நிங்கள் பதில் தரவில்லை என்றார் பிறகு அதை நான் பார்க்கமாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்.

பி ஜே சொன்ன கருத்தை போல் மற்ற அறிஞர்களும் சொல்லியிருக்கிறார்களோ அவர்களை பற்றி உங்களின் நிலைபாடு என்ன?

aa said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சேஹ் உபைக்கான் அவர்கள் இது குறித்து கொடுத்த மேலதிக விளக்கங்களை திட்டமிட்டே மேற்கத்திய கலாச்சாரத்தை சௌதி சமூகத்திற்குள் பெண்ணுரிமை,ஜனநாயகம் என்ற பெயரில் திணிக்க முயலும் சில ஆங்கில பத்திரிக்கைகள் மறைத்துவிட்டன. அந்த நாசகார மேற்கத்திய சக்திகளுடன் அண்ணணின் அருமைத் தம்பிகளும் இணைந்து விட்டனர் என்பது வேடிக்கையான ஆனால் வேதனையான உண்மை.

இதுகுறித்து ஜூன் 20,2010 தேதியிட்ட பிரபல கல்ஃப்நீயூஸ் இதழில் வெளிவந்த வரிகள் ”Later, Al Obaikan clarified that his fatwa was being distorted by the local media which ignored the condition that the milk should be drawn out of the woman and given to the man in a cup to drink” (ஆதாரம்: http://gulfnews.com/news/gulf/saudi-arabia/saudi-women-use-fatwa-in-driving-bid-1.643431)

மேலதிக விபரங்களை அறிய
1)http://adiraisalafi.blogspot.com/
2)http://al-obeikan.com/ (சேஹ் அவர்களின் அதிகாரப்பீர்வ இணைய தளம்)

அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

//இறைவனின் தன்மையைப் பற்றி வரும் செய்திகளுக்கு மேலதிக விளக்கம் கொடுக்கக்கூடாது அப்படியே மௌனமாக நம்பி விட வேண்டும் என்று சொல்லக் கூடியவர்கள் கீழுள்ள ஹதீஸூக்கு தங்கள் நிலையிலிருந்து இறங்கி வந்து விளக்கம் கொடுக்கத்தான் செய்கிறார்கள்.

ஓர் அடியான் கடமையான காரியங்களை செய்வதன் மூலம் தான் இறைவனை நெருங்க முடியும். கடமையான காரியங்களுக்கு பிறகு உபரியான காரியங்களை செய்து இறைவன் பால் நடந்தால் இறைவன் அந்த அடியானை நோக்கி நடக்கிறான். அடியான் இறைவனை நோக்கி ஓடினால் அவனை நோக்கி இறைவன் ஓடி வருகிறான் இறுதியில் அவன்
பார்க்கும் பார்வையாகவும். பிடிக்கும் கைகளாகவும். நடக்கும் கால்களாகவும் இறைவன் மாறி விடுகிறான் அவன் எதை கேட்டாலும் கொடுக்கிறான்.//

நீங்கள் இங்கு குரிப்பிடும் ஹதீஸ் எண் மற்றும் நூல் குறிப்பிடுங்கள்.

இதற்க்கான விளக்கம் அல்லாஹ்வும் நபி(ஸல்) அவர்களும் எதை விளக்கமாக தந்தார்களோ அதை நாங்கள் மதிக்கும் சஹாப்பாக்கள் விளக்கமாக பெற்று கொண்டார்களோ. அதே விளக்கததை தான் நான் புரிந்து கொள்ளுவேன்....

இதை தவிர்த்து (முஃதஜிலா) மற்றும் ஏனைய வழி முறையில் அல்லாஹ்வை ஈமான் கொள்வதைவிட்டும் நான் அல்லாவிடம் பாதுகாவல் தேடுகிரேன்.

//நாம் பதிலை (ஆடியோ, விடியோ இருப்பதால்)http://www.adiraitntj.com/ குறிப்பிட்டு இருந்தும் இல்லை என்கிறார் தெளிவாக படிக்கவும். பிறகு அவர் சொல்வது.//

அவர்களுடைய இனைய தளத்தில் பிஜே மறுக்கும் ஹதிஸ்களின் பட்டியல் எங்கு பதிந்து உள்ளார்கள் என்பதை லின்க்கை தறவும்....


மேலும் விவரம் அல்லாஹ்வை பற்றிய இல்மை பெற்றுகொள்ள எமது இனைய தளத்திலிருந்து பயன் பெற்றுகொள்ளுங்கள்..

http://tamilsalafi.edicypages.com/692746205264/alllkiy-peyrum-uyrnt-pnnpum-atil-kaiyaallk-kuuttaat-naannnku-vlllimurraikllum

http://adiraisalafi.blogspot.com/2012/01/blog-post_3269.html

blogger said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

பி.ஜ அவர்கள் என்ன என்ன ஹதிஸ்கலை மறுகிறார்கள் என்று கூறினால்தனே அதனை அய்யு செய்ய முற்படுவார் அதனை கூறினால்தனே மக்களுக்கும் புரியும்

இதனை முதலில் கூறுகள் .........................

adiraibbc இல் போடுக்கள்

blogger said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

பி.ஜ அவர்கள் என்ன என்ன ஹதிஸ்கலை மறுகிறார்கள் என்று கூறினால்தனே அதனை அய்யு செய்ய முற்படுவார் அதனை கூறினால்தனே மக்களுக்கும் புரியும்

இதனை முதலில் கூறுகள் .........................

adiraibbc போட தயாரா ?

அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அஸ்ஸலாமு அலைகும் அவர்களுக்கு assalamu alaikum....

ஏன் உங்கள் பெயர் போட மாட்டீர்களா? உங்களுக்கு என்று ஒரு அழகான பெயர் இருக்கதான் கூடும் எனவே உங்களுடைய பெய்ரில் வந்து கமேண்ட் பொடுங்கள்.

’’பி.ஜ அவர்கள் என்ன என்ன ஹதிஸ்கலை மறுகிறார்கள் என்று கூறினால்தனே அதனை அய்யு செய்ய முற்படுவார் அதனை கூறினால்தனே மக்களுக்கும் புரியும் ”

கொஞம் பொருமையாக இருங்கள்...அவர்கள் இந்த கட்டுரையில் சொன்னது போல் வேளியிடுவார்கள்...இன்ஷா அல்லாஹ்...அதுவும் அதிரை பிபிசியில்...

M.I.அப்துல் ஜப்பார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

\\நீங்கள் இங்கு குரிப்பிடும் ஹதீஸ் எண் மற்றும் நூல் குறிப்பிடுங்கள\\

ஓர் அடியான் கடமையான காரியங்களை செய்வதன் மூலம் தான் இறைவனை நெருங்க முடியும். கடமையான காரியங்களுக்கு பிறகு உபரியான காரியங்களை செய்து இறைவன் பால் நடந்தால் இறைவன் அந்த அடியானை நோக்கி நடக்கிறான். அடியான் இறைவனை நோக்கி ஓடினால் அவனை நோக்கி இறைவன் ஓடி வருகிறான் இறுதியில் அவன்
பார்க்கும் பார்வையாகவும். பிடிக்கும் கைகளாகவும். நடக்கும் கால்களாகவும் இறைவன் மாறி விடுகிறான் அவன் எதை கேட்டாலும் கொடுக்கிறான். நாம் பரவலாக கேள்விப்படும் பிரபல்யமான – ஆதாரப்பூர்வமான – ஹதீஸ் இது.

ஹதீஸ் 6502, 7405 இந்த இரண்டும் புகாரியில் உள்ளது

பி ஜே சொன்ன கருத்தை போல் மற்ற அறிஞர்களும் சொல்லியிருக்கிறார்களே அவர்களைப்பற்றி ஸலஃபிகளின் நிலைபாடு என்ன?

இந்த இரண்டுக்கு முதலில் பதில் சொல்லுங்கள் பிறகு
ஹதீஸ்கள் பட்டியலை நாம் கண்டிப்பாக வெளியிடுவோம், இன்ஷா அல்லாஹ்.

ஸலஃபிகளே ஸஹீஹான ஹதீசை செயல்படுத்துங்கள் (மறுக்காதீர்கள்) பார்க்க
http://www.adiraitntj.com/2012/01/blog-post_760.html

அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

//ஓர் அடியான் கடமையான காரியங்களை செய்வதன் மூலம் தான் இறைவனை நெருங்க முடியும். கடமையான காரியங்களுக்கு பிறகு உபரியான காரியங்களை செய்து இறைவன் பால் நடந்தால் இறைவன் அந்த அடியானை நோக்கி நடக்கிறான். அடியான் இறைவனை நோக்கி ஓடினால் அவனை நோக்கி இறைவன் ஓடி வருகிறான் இறுதியில் அவன்
பார்க்கும் பார்வையாகவும். பிடிக்கும் கைகளாகவும். நடக்கும் கால்களாகவும் இறைவன் மாறி விடுகிறான் அவன் எதை கேட்டாலும் கொடுக்கிறான். நாம் பரவலாக கேள்விப்படும் பிரபல்யமான – ஆதாரப்பூர்வமான – ஹதீஸ் இது.

ஹதீஸ் 6502, 7405 இந்த இரண்டும் புகாரியில் உள்ளது//

அன்புச் சகோதரரே...

நீங்கள் தந்த ஹதிஸின் எணின் வாசகம் இதோ

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ் கூறினான்:
எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கிற செவியாக, அவன் பார்க்கிற கண்ணாக, அவன் பற்றுகிற கையாக, அவன் நடக்கிற காலாக நான் ஆம்விடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எச்செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன். 91
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி 6502)


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
உயர்ந்தோன் அல்லாஹ் கூறினான்:
என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்துகொள்வேன். அவன் என்னை நினைவு கூரும்போது நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவுகூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவுகூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூருவேன். அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழுமளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் (வலதும் இடதுமாக விரித்த) இரண்டு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச் செல்வேன்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி 7405)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சொல் சஹீஹான ரிவாயத்தில் வந்த பின் அதை சமீஃனா வா அதஃனா என்று இமான் கொள்ள வேண்டும்.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.