அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Monday, October 17, 2011

உள்ளாட்சித் தேர்தல்

உள்ளாட்சித் தேர்தல்  

சென்னை: தமிழகத்தில் முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கியது. இருப்பினும் சென்னை உள்ளிட்ட சில இடங்களில் பல்வேறு காரணங்களினால் வாக்குப் பதிவு தாமதமாக தொடங்கியுள்ளது.

தமிழகம் முழுவதும் முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. இதையடுத்து காலை 6 மணிக்கே பல இடங்களில் வாக்காளர்கள் வரிசையில் நிற்க ஆரம்பித்து விட்டனர். இதனால் வாக்குப் பதிவு காலையிலேயே விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. பெரும்பாலான இடங்களிலும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

சில இடங்களில் தாமதம்

சென்னையில் மந்தைவெளி, மயிலாப்பூர் உள்ளிட்ட சில இடங்களிலும், தமிழகத்தின் சில இடங்களிலும் வாக்குப் பதிவில் தாமதம் ஏற்பட்டது.

காலை 8 மணிக்குத்தான் வாக்குப் பதிவு தொடங்கும் என சில ஏஜென்டுகள் தவறாக நினைத்து விட்டதால் அவர்கள் வரவில்லை. எனவே அந்த வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவை தொடங்க முடியவில்லை.

இதேபோல சென்னை வாக்குச் சாவடிகளில் வெப் காமராக்கள் பொருத்துவதில் தாமதம் ஏற்பட்டதால் வாக்குப் பதிவு தொடங்குவது தாமதமானது.

சில இடங்களில் மின்தடை குறுக்கிட்டதால் வாக்குப் பதிவில் தாமதம் ஏற்பட்டது. இப்படி பல்வேறு காரணங்களால் வாக்குப் பதிவில் சில இடங்களில் தாமதம் ஏற்பட்டது. மற்றபடி வேறு பிரச்சினை எதுவும் இதுவரை எழவில்லை. வாக்காளர்கள் பெரும் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

இன்று மாலை 5 மணி வரை தொடர்ந்து ஓட்டுப்பதிவு நடைபெறும். முதல் கட்ட தேர்தலில் ஒரு கோடியே 37 லட்சத்து 97 ஆயிரத்து 898 பேர் வாக்களிக்க உள்ளனர்.

எங்கெங்கு தேர்தல்?

சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, தூத்துக்குடி, ஈரோடு, திருப்பூர், ஈரோடு ஆகிய பத்து மாநகராட்சிகள், 60 நகராட்சிகள், 259 பேரூராட்சிகள் மற்றும் 191 ஊராட்சி ஒன்றியப் பதவிகளுக்கு இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

10 மாநகராட்சிகளில் மேயர் பதவிக்கு 209 பேரும், 820 மன்ற உறுப்பினர் பதவியிடங்களுக்கு 7,729 பேரும் களத்தில் நிற்கின்றனர். மொத்தம் 48, 371 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் 2 கோடியே 70 லட்சத்து 95 ஆயிரத்து 827 பேர் வாக்களிக்க உள்ளனர்.

மாநகராட்சிகளில் எத்தனை வார்டுகள்?

தமிழகத்தில் பல மாநகராட்சிகளின் எல்லைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. விரிவுபடுத்தப்பட்ட சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளும், மதுரை, கோவையில் தலா 100 வார்டுகளும் உள்ளன.

திருச்சியில் 65, வேலூர், ஈரோடு, சேலம், தூத்துக்குடி, திருப்பூரில் தலா 60 வார்டுகளும், நெல்லையில் 55 வார்டுகளும் உள்ளன.

மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று நேரடி தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்களிப்புக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

தேர்தலையொட்டி சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சித் தேர்தலில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப் பதிவு வீடியோ மூலம் பதிவு செய்யப்படுகிறது.

2ம் கட்ட வாக்குப் பதிவு அக்டோபர்19ம்தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 21ம் தேதி நடைபெறுகிறது

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.